பக்கம் எண் :

106கல்லாடம்[செய்யுள்11]



“தொடைவிடை உழாத் தொடைவிடை துள்ளித்
 தொடைவிடை ஊழிவை தோலாத்-தொடைவேட்டு
 அழிபடல் ஆற்றல் அறிமுறையேன் றெட்டின்
 வழிபடர்தல் வல்ல தவை”          (புறப்பொ. 173)

எனவும்,

“குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
 விழுப்பெ ரொழுக்கம் பூண்டு காமுற
 வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற்
 காத லின்பத்துத் தூங்கித் தீதறு
 நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
 அழுக்கா றின்மை யவாஅ வின்மையென
 இருபெரு நிதியமு மொருதா மீட்டும்
 தோலா நாவின் மேலோர் பேரவை”  (ஆசிரியமாலை-புறத்திரட்டு)

எனவும்,

“குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை
 நடுச்சொல்லு நல்லணி யாக்கம்-கெடுக்கும்
 அழுக்கா றவாவின்மை அவ்விரண்டோ டெட்டும்
 இழுக்கா வவையின்கண் எட்டு”       (புறப்பொ. பழையஉரை. 173)

எனவரும் பிற சான்றோஎ இலக்கியங்களிலும் காண்க. இரிவினை-நல்வினை, தீவினை. நல்வினையும் பிறப்புக்குக் காரணமாதலின் இருவினை கெடுக்கும் எனப்பட்டது. புண்ணியக் கல்வி-புண்ணியம் செய்ததற்குக் காரணமான கல்வி. உள்நிகழ் மாக்கள்-உள்ளே நிகழ்விக்கும் மாக்கள் என்க. மாக்கள் என்பது ஈண்டுத் தன் சிறப்புப் பொருளாகிய ஐயறிவுடையோரைக் குறியாமல் மாந்தர் என்னும் பொதுப் பொருள் குறித்து நின்றது.

32: சிறு..................................நுதலே

     (இ-ள்) சிறுமதி-இளம்பிறையை யொத்த; நுதலே-நெற்றியை யுடையோய் என்க.

     (வி-ம்.) இது தலைவன் தோழியை விளித்தபடியாம். சிறுமதி நுதல்: அன்மொழித்தொகை. ஏ; விளியுருபு.

25-32: பரி........................................நீடுவர்

     (இ-ள்) பரிபுரக்கம்பலை இருசெவியுண்ணும் குடக்கோச்சேரன்-இறைவன் அம்பலத்திற் கூத்தாடுங்கால் அவன் திருவடியிலணிந்த சிலம்புகளின் ஓசையைத் தன் இருசெவியாலும் கேட்டு மகிழும் பேறுடைய குடநாட்டு மன்னனாகிய