பக்கம் எண் :

மூலமும் உரையும்19



முதலிய சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மரும் கேளாநிற்ப; பெருந்தமிழ்-பெரிய தமிழில்; பாய்பார் அறிய-பரந்த உலகிலுள்ளோர் அறியும்படி; விரித்த அருந்தமிழ்ப் புலவனும் நீயே ஆதலின்-பொருள் விரித்துணர்த்திய உணர்தற்கரிய தமிழ்ப் புலமையுடையோனும் நீயே யாதலால் என்க.

     (வி-ம்.) மணிக்கால்-மணிகளின் பிறப்பிடம். இறையோன் பொருள்-இறையனார் அருளிச்செய்த களவியல் என்ற அகப்பொருணூல்; முருகப்பெருமான் இறையனார்களவியல் நூலுக்கு நல்லுரை உணர்த்தினார் என்பதனை,

     “அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது, செல்லவே, பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என்தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறுபுக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளிவம்மின் என்றான். என அரசனை விடுத்து எல்லோரும் போயினபின்றைக், கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது, கழிந்தபின்னர், நாடு மலிய மழை பெய்தது, பெய்த பின்னர், அரசன், ‘இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப் பக்கமும் ஆட் போக்க, எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, “பொருளதிகாரம் வல்லாரை எங்குத் தலைப்பட்டிலேம்” என்று வந்தார்; வர அரசனும் புடைபடக் கவன்று, ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே? பொருலதிகாரம் பெறேமேயெனின், ‘இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயின் அழல் நிறக்கடவுள் சிந்திப்பான்; ‘என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்கற்பாலம்’ என்று, இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்.

     “இட்டபிற்றை ஞான்று, தேவர்குலமும் வழிபடுவான், தேவர் கோட்டத்தை எங்குந் துடைத்து, நீர் தெளித்துப் பூவிட்டுப் பீடத்தின் கீழ் என்றும் அலகிடாதான் அன்று தெய்வதத்துக் குறிப்பினான், ‘அலகிடுவென்’ என்று உள்ளங்குளிர அலகிட்டான்; இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக், கொண்டு போந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்டப், பிராமணன் சிந்திப்பான்: “அரசன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றான் என்பது கேட்டுச் செல்லா நின்றது உணர்ந்து நம் பெருமான் அருளிச் செய்தானாகும்’ என்று தம் அகம் புகுதாதே, கோயிற் றலைக்கடைச் சென்று நின்று, கடைகாப்பாற்கு உணர்த்தக், கடைகாப்பார் அரசற்கு உணர்த்த, அரசன், ‘புகுதுக’ எனப் பிராமணனைக் கூவச், சென்று புக்குக் காட்ட ஏற்றுக் கொண்டு நோக்கிப் ‘பொருளதிகாரம்! இது நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது’ என்று, அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து, ‘நம் பெருமான்