பக்கம் எண் :

198கல்லாடம்[செய்யுள்22]



அமிழ்தத்தோடே பொருந்திக் கிடக்கும் தன் பகுதிகளெல்லாம் நிறையப் பெற்ற முழுத்திங்கள் மண்டிலத்தின் ஒரு பக்கத்தே; துணை கிடந்த மதி ஆகி அதற்குத் துணையாகக் கிடந்த மற்றொரு திங்கள் மண்டிலமே ஆகி; பறவை குடிபோகி விண்டு அருவி வீச-அறுகாற் சிறு பறவையாகிய வண்டுகள் தன்பால் நின்றும் அகன்று போய்விடச் சிதர்ந்து அருவி போலச் சிந்துபடி; நற ஒழுக்கும் பாண்டில் இறால் ஆய்-தேனைச் சிந்துகின்ற வட்டமாகிய தே கூடும் ஆகி என்க.

     (வி-ம்.) எய்ப்பு-இளைப்பு. பக்கம்-பகுதி (கலை) பக்கம் நிறைமதி-முழுத்திங்கள். பறவை ஈண்டு அறுகாற் சிறு பறவை. அஃதாவது வண்டு என்க. “தாது பறவை பேதுற லஞ்சி” என்றார் பிறரும். விண்டு-கிழிந்து; பிளந்துமாம். நற-தேன். பாண்டில்-வட்டம். இறால்-தேன்கூடு.

16-20: இளமை..............................ஆடிஆகி

     (இ-ள்) வரையர மாதர் இளமை நீங்காது குழுவுடன் காவல் கொள் அமுதம் அருந்த-வரையர மகளிர் தம்மிளமை நீங்காமைப் பொருட்டுக் கூட்டத்தோடு பாதுகாத்து வரும் அமிழ்த உணவினை உண்ணும்படி; வாக்கி இடப்பதித்த வள்ளமும் ஆகி-ஒருவருக்கொருவர் வாக்கி வழங்கும் பொருட்டுப் பதித்து வைத்த கிண்ணமும் ஆகிப் பின்னும்; இடைவளி போகாது நெருங்கு முலைக் கொடிச்சியர்- இடையிலே காற்றும் புகுந்து போகுதற்கியலாதபடி நெருங்கிய முலையினையுடைய குறத்தியர்; சிறுமுகம் காணும் ஆடி ஆகி-தம்முடைய சிறிய முகத்தினது அழகைப் பார்த்தற்குரிய கண்ணாடியும் ஆகி என்க.

     (வி-ம்.) வரையர மாதர்-மலைகளில் உறையும் ஒரு வகைத் தெய்வ மகளிர். இளமை நீங்காது எனது காவல் கொள்ளுதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. வாக்கி இட-வார்த்து வழங்குதற்கு. இனி வாக்கி இடம் பதித்த எனப் பாடமோதி அமுதத்தை வார்த்துத் தன்னிடத்தே பதித்து கைக்கப்பட்ட எனினுமாம். வள்ளம்-கிண்ணம். வளி-காற்று. கொடிச்சியர்-குறிஞ்சி மகளிர். ஆடி-கண்ணாடி. இடைவளியும் போகாது எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. இனி 7-10 குழியாகிக் கண்ணும் ஆகிச் சிந்தூரமும் ஆகித் துணைமதியும் ஆகி இறாலும் ஆகி வள்ளமும் ஆகிச் சிரந்தன ஒருசுனை (21) என அனைத்தையும் சுனைக்கு அடையாக்குக.

21-22: சிறந்தன................................அணைந்தனள்

     (இ-ள்) இம்மலை சிரந்தன ஒருசுனை-இந்த மலையிடத்தே சிறந்தனவாகிய சுனைகளுள் வைத்து ஒப்பற்ற ஒரு சுனையின்கண்;ஆட-நீராடுதற்கு; அளவாக் காதல் கைமிக்கு அணைந்தனள்-அளவு படுத்தப்படாத வேட்கை கை கடந்து மிகுதலாலே சென்றனள் என்க.