பக்கம் எண் :

மூலமும் உரையும்21



56 - 7: வெட்சி...............................கெள்ளுதும்

     (இ-ள்) வெட்சி மலர் சூழ்ந்த-வெட்சி மலர் மாலை அணியப்பெற்ற; நின் இருகழல்கால்-உன்னுடைய வீரக்கழலணிந்த இரண்டு திருவடிகளையும்; குழந்தை அன்பினொடு-சிறு குழந்தை தந்தையின்பாற் செலுத்தும் அன்பையொத்த இயற்கை யன்பினொடு, சென்னிதலைக் கொள்ளுதும்-எந்தலையின் மேல் ஏற்றுக்கொள்வேம், அஃதெற்றுக்கெனின் என்க,

     (வி-ம்.) குழந்தையன்பு-இயற்கையன்பு சென்னிதலை-சென்னியின்மேல், தலை : ஏழனுருபு,

58-65: அறிவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,எனவே

     (இ-ள்) அறிவு நிலைகூடா சில்மொழி கொண்டு-மெய்யறிவு நிலைபெறாத எம்முடைய சிலவாகிய இப்புன்மொழிகளைத் திருச்செவியில் ஏற்றுக்கொண்டு, கடவுள்கூறா உலவா அருத்தியும்-இறைவனாகிய உன்னைப் புகழ்ந்தேத்தாமைக்குக் காரணமான அழியாத அவாவினையும்; சன்னப் பீழையும்-இப்பிறவிப் பிணியையும்; தள்ளாக்காமமும்-ஒழித்தற்கரிய காம நுகர்ச்சியினையும்; தன்படுதுயரமும்-தன்னாலுண்டாகிய துன்பங்களையும்; அடைவு கெட்டு இறத்தலும்-முறைதப்பி ஒழுகுதலையும்; தென்புலக் கோமகன் தீ தெறு தண்டமும்-கூற்றுவன் நெருப்புப் போன்று வருத்துகிற ஒறுத்தற் றுன்பங்களையும்; நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்-நரகத்தினும் துறக்கத்தினும் சென்று சென்று உழலுதலால் வருகின்ற துன்பங்களையும்; நீளாது இம்பரின் முடித்து-இன்னும் நீளவிடாமல் இப்பிறப்பிலேயே ஒழித்து; மீளாக் காட்சி இன்று தருதி என-பிறப்பின்கண் மீளாமைக்குக் காரணமான மெய்க்காட்சியினை இப்பொழுதே அளித்தருள்வாயாக! என்றே; என்க.

     (வி-ம்.) அறிவுநிலை கூடாத மொழி என்றது, மயங்கிக்கூறிய மொழி என்றவாறு. நீ பெருந் தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும் ஆதலின் எளியேமாகிய எம் புன்மொழியையும் எமொருட்டு ஏற்றுக்கோடல் இழுக்காகாமையின் ஏற்றுக் கொண்டருளுக என்று வேண்டியபடியாம். கடவுள்: முன்னிலைப்புறமொழி, கடவுளாகிய உன்னை என்க. கடவுள் கூறுதலாவது கடவுளின் புகழைப் பாடிப் பரவுதல்; அவாமிக்குடையோர் அஃதுந்திய வழியே இயங்குதலன்றி இறைவனை நினைதலும் வாழ்த்தி வணங்கலும் அரிதாகலின் கடவுட் கூறாமைக்கு அருத்தியை ஏதுவாக்கினார். உலவா-அழியாத. எல்லாத் துன்பங்களுக்கும் முதலாகலின் அருத்தியை முற்படக் கூறினார். அருத்தி-அவா.

“அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்”

(திருக். 397)

எனவும்,