|
குடியாகவிருந்து தேவர்களும்
அஞ்சும்படி முழங்குதற்கிடனான மலையின்கண் அமைந்த சுனைகளிலே நீராடியும் என்க.
(வி-ம்.)
மலையில் உறைகின்ற முகில் முழங்குதல் அமலை அழுவதுபோலத் தோன்றுகின்றது என்பது கருத்து.
இனி மலை அழுதற்குக் காரணங்கூறுவார் தம்முடைய சிறகுகளை இந்திரன் அரிந்தமையால் உண்டான
புண்ணிற்கு ஆற்றாது என்றார். சிறை-சிறகு. அரிபுண்: வினைத்தொகை. புண்: ஆகுபெயர்:
மலை முழையாகிய வாயைத்திறந்து அழுதாற்போல என்க. கலுழ்தல்-அழுதல். கமம்-நிறைவு.
கொண்மு-முகில். வாள்: ஆகுபெயர். முரற்றுதல்-முரலுதல்; முழங்குதல். குடைதல்-நீராடுதல்.
21-23:
பிரசமும்........................ஏற்றும்
(இ-ள்)
பிரசமும் வண்டும் இரவி தெறும் மணியும்-தேனையும் வண்டுகலையும் ஞாயிற்றின் ஒளியைத்
தோற்பிக்கும் மாணிக்கத்தையும்; வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து-வயிரத்தையும்
பொன்னையும் வரிசைவரிசையாகக் கொழித்து; துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும்-பல
வண்ணத்துகில் தூங்கி அசைதல்போலே நுடங்கிவீழும் அருவிநீரினை மெய்யின்கண் ஏற்று
விளையாடியும் என்க.
(வி-ம்.)
பிரசம்-தேன். இரவி தெறுமணியெனவே சாதுரங்கம் என்னும் மாணிக்கம் என்பது பெற்றாம்.
என்னை! சாதுரங்க நிறம் கமலம், கருநெய்தல், இரவியொளி, தழல் என்பவாகலான் என்க.
தேன் கருவண்டு மாணிக்கம் வயிரம் பொன் இவற்றை வரிசை வரிசையாகக் கொழித்துக்கொண்டு
வீழ்தலால் அருவிக்குப் பலவண்ணத் துகில் உவமை என்க. அருவிநீரை உடம்பில் ஏற்று விளையாடுதலின்
அருவியேற்றம் என்றாள்.
24-25:
மறுவறு......................எறிந்தும்
(இ-ள்)
மறுஅறு செம்மணி கால் கவண்நிறுத்தி-குற்றமற்ற மாணிக்கத்தைக் காலினையுடைய கவணிடத்தே
வைத்து; நிறைமதி கிடக்கும் இறால்விழ-முழுத்திங்கள் கிடந்தாற்போலே கிடக்கின்ற
தேன் கூண்டு வீழும்படி; எறிந்தும்-அம்மாணிக்கத்தை வீசியும் என்க.
(வி-ம்.)
மறு-குற்றம். கால்-கவணினைச் சுற்றுதற்குரிய சிறு கயிறுகள். நிறைமதி தேன்கூண்டுக்கு
உவமை.
26-27:
எதிர்........................கூயும்
(இ-ள்)
எதிர்சொல்கேட்ப நெடுமலை கூயும்-எதிரொலி கேட்டு மகிழ்தற் பொருட்டு நெடிய மலை எதிர்நின்று
கூவியும்; கால்புக திகைத்த நெருக்கு பொழில் புக்கும்-காற்றும் புகுதற்கியலாதபடி நெருங்கிய
சோலையின்கண் புகுந்தும் என்க.
|