பக்கம் எண் :

324கல்லாடம்[செய்யுள்40]



     (வி-ம்.) வெப்பந்தணியாத என்க. அழல்தாவி தேவர்கள் மயங்கித்தாழ்த்திப் புகுந்து இமையாது பகுத்துண்டு உயிர் தாங்கும்படி செய்கின்ற இவ்வட்டை என்க. வட்டை-வழி. இவை விரதியர் மொழியினைத் தலைவி கொண்டு கூறியபடியாம். ஒக்கல்-சுற்றத்தார். கொண்மூ-முகில். புனல்-ஈண்டு வானகங்கை. தரு-கற்பகம். அச்சத்தால் இமையாதிருந்தனர் எனவும் ஒருபொருள் தோன்றுதலுணர்க. அமிழ்துண்டிலரெனின் இவ்வெப்பத்தால் அத்தேவரெல்லாம் இறந்தொழிதல் ஒருதலை என்பார் மருந்து பகுத்துண்டு உயிர் தாங்கும் என்றார். இவ்வெப்பந் தாக்கியும் போகாவுயிரென்பார் வல்லுயிர் என்றார்.

17-18: பாடலம்............................செல்குநளென்று

     (இ-ள்) புது பாடலம் தார் காளைபின்-இன்றலர்ந்த பாதிரி மலர்மாலையணிந்த காளைப்பருவத்தையுடையான் ஒரு நம்பியோடே; ஒன்றால் தள்ளாவிதியில் செல்குநள் என்று-யாதோருபாயத்தாலும் விலக்குதற்கியலாத ஊழ்காரணமாக நும்மகள் செல்கின்றனள் என்றும் என்க.

     (வி-ம்.) தான் தேர்ந்து கொண்ட தலைவனுடைய மனவெழுச்சியையும் பருவத்தையும் பாராட்டுவாள் புதுப்பாடலந்தார்க் காளை என்றாள். பாடலந்தார்-பாதிரிமலர்மாலை. ஒன்றால்-பிறிதோருபாயத்தால் எனினுமாம்.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
 சூழினுந் தான்முந் துறும்”
(குறள். 380)

என்பது பற்றி ஒன்றால் தள்ள விதி என்றாள். இனி யாதொரு செயலாலும் மாற்றப்படாத கற்புடைமை காரணமாக எனினுமாம்.

14-16: தாய்...............................மாழ்கினள்

     (இ-ள்) தாய் கால் தாழ்ந்தனள்-தாய்மார்களின் திருவடிகளை நினைந்து கைகூப்பித் தலைதாழ்த்துத் திசைநோக்கி வனங்கினாள் என்றும்; ஆயம் வினவினள்-தன் தோழியர் குழாத்திலுள்ளாரை நலமுசாவினள் என்றும்; பாங்கியைப் புல்லினள்-உசாத்துணைத் தோழியாகிய தமக்கையை அன்பினாலே தழுவிக் கொண்டனள் என்றும்; அயலும் சொற்றனள்-ஏனையோர்க்கும் வணக்கம் சொல்லினள் என்றும்; மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள்-தன் மகவாகக்கொண்டு பேணி வளர்த்த கிளி முதலிய பறவைகளை நினைந்து இரங்கி மயங்கினள் என்றும் என்க.

     (வி-ம்.) தாய்-நற்றாய் முதலியோர். ஆயம்-தோழியர் குழு. பாங்கி என்றது செவிலி மகளாய் தனக்கு மூத்த உசாத் துணைத் தோழியை. அயலும்-ஏனையோர்க்கும். மக்கட் பறவை: பண்புத்தொகை. உவமத்தொகை எனினுமாம். அவை கிளியும் நாகணவாய்ப்