பக்கம் எண் :

336கல்லாடம்[செய்யுள்41]



42-43: திருவடி..............................வனமுலை

     (இ-ள்) திருவடி புகழுநர் செல்வம் போலும்-அழகிய அடிகளைப் புகழ்ந்து பாடும் சான்றோரது செல்வம் வளருமாறு போலே; அண்ணாந்து எடுத்த அணிஉறு வனமுலை-மேலோங்கித் தலை நிமிர்ந்த அணிகலன்கள் மிக்க அழகுள்ள முலைகளானவை வளராநிற்கும் என்க.

     (வி-ம்.) தலைவியினுடைய கொங்கைகள் செல்வம்போல வளரும் என்க. அண்ணாத்தல்-நிமிர்தல். அணி-அணிகலன்கள். உறு: மிகுதிப் பொருட்டு. வனம்-அழகு.

44-45: அவன்..................................நுசுப்பு

     (இ-ள்) மலைமுலைப்பகை அட-மலைபோன்ற முலையாகிய பகை வருத்துதலாலே; மாழ்குறும் நுசுப்பு-வருந்துதலையுடைய அவளிடையானது; அவன் கழல் சொல்லுநர்-அக்கடவுள் திருவடியைப் புகழ்ந்து வாழ்த்துவொருடைய; அருவினை மானும்-தீர்த்தற்கரிய வினை தேய்வது போலே தேய்ந்திருக்கும் என்க.

     (வி-ம்.) மலைமுலை: உவமைத்தொகை. அட: காரணப் பொருட்டாகிய வினையெச்சம். மாழ்கல்-வருந்துதல். கழல்: ஆகுபெயர்.

46-47: மற்றவன்................................அல்குல்

     (இ-ள்) மணிப்பாம்பு அல்குல்-மணிமுற்றிய பாம்பின் படத்தையொத்த அவள் அல்குலானது; அவன் அசைத்த மாசுணம்-அச் சோமசுந்தரக் கடவுள் அரையிற் கட்டின பாம்பானது; பரப்பி அமைத்தது கடுக்கும்-தன் படத்தை விரித்துப் பொருத்தி வைத்தாற்போன்றிருக்கும் என்க.

     (வி-ம்.) மணிப்பாம்பு அல்குல் என்றது உவமை குறியாது வாளா அடை மாத்திரையாய் நின்றது. அசைத்தல்-கட்டல். மாசுணம்-பாம்பு. கடுக்கும் என்பதனை ஈண்டும் ஒட்டுக.

48-49: இருகுழை........................கடுக்கும்

     (இ-ள்) இருகுழை கிழிக்கும்-அவளுடைய இரண்டு செவிகளையும் சென்று சென்று கிழிக்கின்ற; அரி மதர் மலர் கண்-செவ்வரி பரந்த மதர்த்த மலர்போன்ற அவளுடைய கண்களானவை; ஆங்கு அவன் தரித்த கலைமான் கடுக்கும்-அப்பெருமான் தன் கையின்கணேந்திய கலைமானின் கண்களை ஒத்திருக்கும் என்க.