பக்கம் எண் :

மூலமும் உரையும்351



உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க - உலகின்கண் வாழும் உயிரினங்கள் எல்லாம் தம் உள்ளத்தோடே அவ்விசையின்கண் ஒரு மைப்பட்டு அடங்கா நிற்கும்படி; இசை விதிபாடிய - இசை நூல் விதிப்படி பாடியவாற்றாலே; இசைபகை துரந்த - தன் மெய்யடியாராகிய அப் பாணபத்திரருடைய பகைவனாகிய எமநாதனை ஓடச் செய்தருளிய; கூடற்கு இறையோன் - மதுரைக்கு இறைவனாகிய சோமசுந்தரக் கடவுளினுடைய; தாள் விடுத்தோர் என-திருவடிகளை நினையாது விடுத்தவர் துன்பத்தாலே துயிலா திருத்தல் போல என்க.

     (வி-ம்.) உந்தி - அகவுறுப்பினுளொன்று. ஒலி உந்தியில் தோன்றும் என்பதனை,

" உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
இண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான"          (தொல். பிறப்பி. 1)

எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க. பாலை - ஒருவகைப் பண். எழுப்பி என்றதனால் ஆரோசையாக எழுப்பி என்பது பெற்றாம். அமரிசை - அமரோசை. இவற்றை ஆரோகணம் அவரோகணம் என்று கூறுப. தூங்கல், துள்ளம், மெலிதல் முதலியன இசைக் காரணங்கள். தாரி - ஒழுங்கு. சாதாரி - ஓரிசை. இறைவன் பாணபத்திரன் பொருட்டு விறகு சுமந்து சென்று வடபுலத்து ஏமநாதனைச் சாதாரி- ஓரிசை. இறைவன் பாணபத்திரன் பொருட்டு விறகு சுமந்து சென்று வடபுலத்து ஏமநாதனைச் சாதாரி பாடிக் காட்டி ஓட்டினார் என்னுமிதனைத் திருவிளையாடற் புராணத்தில் உணர்க, தாளை விடுத்தோர் துன்பத்தால் கண் துஞ்சாமை போல என விரித்துக் கொள்க.

35 - 36: என் . . . . . குருகு

     (இ-ள்) என்கண் துஞ்சா நீர்மை-என்னுடைய கண்கள் துயிலாமைக்குக் காரணமான எனது இத்துன்ப நிலைமையை; நம் குருகு - எம்முடைய சூழிலில் வாழும் இவ்வன்னமானது; முன்கண்டு அவர்க்கு ஓதாது - முன்னரே கண்டு வைத்தும் அந்தத் தலைவர்பாற் சென்று கூறுகின்றிலுது; இனி யான் என் செய்கோ? என்க.

     (வி-ம்.) இனியான் என்செய்கோ என்பது குறிப்பெச்சம். கண் துஞ்சா நீர்மை- கண் துஞ்சாமைக்குக் காரணமான துன்பநிலைமை. முன்கண்டும் எனல் வேண்டிய சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. எம் சூழலில் வாழும் குருகு என்பாள் நங்குருகு என்றாள். குருகு - அன்னம்.