பக்கம் எண் :

476கல்லாடம்[செய்யுள்64]



கண்களால் பேசிக்கொண்டதுபோல; இவ்வூர்- இந்த ஊர் மக்கள்; ஒருவரின் ஒருவர் சொல்ல - ஒருவரோடொருவர் சொல்லி; உள்ளத்து அடக்கி - தத்தம் நெஞ்சிலேயே வெளிவிடாதடக்கி; தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி - வெளிப்படாத நகைப்போடே மூக்கின்மேல் விரல் இட்டுக் குறித்து; தூற்றும் அம்பல் அடக்கி- புறங்கூறுகின்ற அலர்மொழியைக் கூறாது அடக்கி என்க.

     (வி-ம்.) கொடுங்கோல் மன்னனுக்கு அழிவு வந்துற்றபொழுது அவனால் இன்னலுற்ற குடிமக்கள் அஞ்சி ஒருவரோ டொருவர் கண்களால் பேசிக்கொள்வது தலைவியின் ஒழுக்கம் பற்றி ஊர் மாக்கள் தம்முள் ஒருவரோடொருவர் பேசும் அம்பலுக்குவமை. அம்பல்-ஒலி வெளிப்படாது தம்முள் மெல்ல முகிழ் முகிழ்த்துப் பேசுதல். இங்ஙனம் பேசுவோர் மூக்கில் விரலைவைத்துப் பேசுதல் வழக்கம். இதனை,

"சிலரும் பலருங் கடைக்க ணோக்கி
 மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
 மறுகிற் பெண்டி ரம்ப றூற்ற"        (நற்றினை.. 149)

எனவரும் செய்யுளானும் உணர்க.

10 - 14: கடல்...................... நும்மை

     (இ-ள்) கடல் கிடந்து அன்ன நிரைநிரை ஆயவெள்ளமும் - கடல் கிடந்தாற்போல அணி அணியாக நின்ற தோழிமார் கூட்டத்தையும்; மற்றையர் கள்ளமும் கடந்து- பிறசுற்றத்தாருடைய வஞ்சத்தையும் நீங்கி; தாயவர் மயங்கும் தனித்துயர் நிறுத்தி-நம் தாய்மார் நின் பிரிவினால் மயங்காநின்ற ஒப்பற்ற துன்பத்தையும் ஆற்றி; பறவை மக்களை பரியுநர் கொடுத்து-யாம் அன்புடன் வளர்த்த கிளி முதலிய பறவையாகிய குஞ்சுகளை நம்போல் அன்புறுவோரிடத்துப் பேணும்படி ஒம்படை செய்து; வல் நும்மை யானே கிடைப்பல்-விரைவில் நுங்களிடத்தே யானே வந்து சேருவேனாக என்க.

     (வி-ம்.) கடல்போல மிக்க ஆயவெள்ளம் என்றவாறு. ஆய வெள்ளம்- தோழியமார் கூட்டம். மற்றையர் என்றது ஏனைச் சுற்றத்தாரை. கள்ள்ம்- வஞ்சகம். தாயவர் என்புழி அவர் பகுதிப்பொருட்டு. நற்றாயும் செவிலித் தாயாரும் எனத் தாய்மார் பலராகலின் பன்மை கூறினள். தனித்துயர் - ஒப்பற்ற துன்பம். மகப் பிரிதலால் வரும் துன்பமாகலின் அங்ஙனம் கூறினாள். மக்கள் போல வளர்த்தலின் பறவைகளையே மக்கள் என்றாள் எனினுமாம். குஞ்செனின் வழுவமைதியாகக் கொள்க. பரியுநர்- அன்புறுவோர். இனி பரிக்குநர் என்பது பரியுநர் என்று மருவி நின்றது எனினுமாம். பரிக்குநர்- பாதுகாப்பவர். இது அம்மகளிரின் பேரன்பினைப் புலப்படுத்துகின்றது. இதனோடு தன் கணவனுடன் நாடிறந்து காடு நோக்கிச் செல்லும் சீதை சுமந்திரனை நோக்கி.