கடலுள் அமையாத அமுதம் எனக்குத் தந்து; தீரா உள்ளும் புறம்பும் ஒழி வின்றி நீன்ற வள்ளன்மை காட்டி மலரடி யருளிய - நீக்கமற்று உள்ளேனும் புறம்பேனுந் தெரியாதபடி யொழிவற நிறைந்த தலைமையைக் காட்டித் தனது திருவடியைத் தந்த; மன்னன் - ஞானராசா; எங்கோன் - எம்முடைய சுவாமியாயுள்ளவன்; வார்புனற் பெண்ணை வெண்ணெய் காவலன் மெய்கண்ட தேவன் அண்ணல் அருளாலயத்தன் - ஒழுக்கறாத புனல்பொருந்திய பெண்ணையால் சூழப்பட்ட திருவெண்ணெய் நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவன், சருவான்மாக்களுக்குங் கருத்தா, என்னுடைய உள்ளமே (தன் அருளே?) கோயிலாகக் கொண்டவன்; நண்ணியமலம் முதலாயின மாய்க்கும் உலக உயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே - பொருந்திய ஆணவ மலத்தை லிங்கமூர்த்தமாய் வந்து கெடாமற்கெடுத்தும் மாயையைக் குருமூர்த்தமாய் வந்து கெடாமற்கெடுத்தும் கன்மத்தைச் சங்கம மூர்த்தமாய் வந்து கெடாமற்கெடுத்தும், இப்படி வந்த மூன்று முதலும் பிரபஞ்சத்துக்கும் ஆன்மாக்களுக்கு மிடமும் ஒரு முதலே யென்றவாறு. இச்செய்யுள் கர்த்தா விரிவித்த முறைமை கூறியது. 20 இருபா விருப துரையெழுதி னோன்முன் ஒருவா விகற்ப முணர்ந்தோன் - அருளுடம்பாம் பண்புடைய சிற்றம் பலநாடி தாள்பணிவோன் சண்பைநகர்த் தத்துவநா தன். | [குறிப்பு :- அருணந்தி சிவாசாரியார் செய்தருளிய இருபாவிருபது, திருவாவடுதுறை நமச்சிவாயத்தம்பிரான் செய்த விரிவுரையோடு சமாஜத்தின் சித்தாந்த சாத்திர முதற் பதிப்பில் வெளியிடப் பட்டுள்ளது; இந்தப் பதிப்பில் சீகாழித் தத்துவநாதர் செய்த காண்டிகை யுரை முதன் முதலாக வெளியிடப்படுகிறது. இவர் சிற்றம்பலநாடிகள் சீடரென்பது உரையிறுதியில் காணும் செய்யுளால் விளங்கும். இவரே சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய உண்மை நெறிவிளக்கம் செய்தார் என்பது காலஞ்சென்ற திரு. அனவரத விநாயகம் பிள்ளையவர்களால் முதற்பதிப்பின் 980 - 982 பக்கங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதியின் துணைகொண்டு இவ்வுரை இங்கு பதிப்பிக்கப்படுகிறது. - மு. அருணாசலம்] |