விஷ்ணு இரக்ஷிப்பன், - சொல்லில் உருத்திரனுந் துடைப்பன் - சொல்லு மிடத்து உருத்திர மூர்த்தி சங்கரிப்பர், - திடப்பெறவே ஈசர் என்றுந் திரோபவிப்பர் - நிச்சயமாக மகேசுவரமூர்த்தி எக்காலமுந் திரோபவம் பண்ணுவர், - அன்றே சதாசிவரும் அநுக்கிரகராம் - அநாதிதொடங்கிச் சதாசிவமூர்த்தி அநுக்கிரகம் பண்ணுபவராம். 8 மண்கடின மாய்த்தரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமாம் ஒண்கனல்சுட் டொன்றுவிக்கும் ஓவாமல் - வண்கால் பரந்துசலித் துத்திரட்டும் பார்க்கில்ஆ காயம் நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. 9 | (உரை) மண் கடினமாய்த் தரிக்கும் - பிருதிவியானது விடயங்களிலே கடினகுணத்தைக் கொடுத்துக்கொண்டு நிற்கும், - வாரி குளிர்ந்தே பதமாம் - அப்புவானது விடயங்களிலே நெகிழ்ந்த குணத்தைக் கொடுத்துக்கொண்டு நிற்கும், - ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் - ஒள்ளிய தேயுவானது விடயங்களிலே சுட்டு ஒன்றுதலைப் பண்ணிக்கொண்டு நிற்கும், - வண் கால் ஓவாமற் பரந்து சலித்துத் திரட்டும் - வளப்பத்தையுடைய வாயுவானது நீங்காது பரந்து சலித்து விடயங்களைத் திரட்டும், - பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிறைந்து நிற்கும் - விசாரிக்குமிடத்து ஆகாயம் நிரந்தரமாய் நிறைந்து விடயங்களுக்கெல்லாம் இடங்கொடுத்துக் கொண்டு நிற்கும். 9 உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக் கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் - மெள்ளவே ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம் ஆசைதரும் ஐம்புலனே யாம். 10 | (உரை) உன்றனக்கு உள்ளபடி மாபூதம் ஓதினோம் - உனக்கு உண்மையாகப் பஞ்ச மகா பூதங்களுஞ் சொன்னோம், - கள்ளமிகும் ஐம்புலனும் மெள்ளவே கட்டுரைக்கில் - கள்ளமிகுந்த பஞ்சவிடயங்களை மெல்லச் சொல்லுமிடத்து, - ஓசை பரிசம் உருவஞ் சுவை நாற்றம் ஆசை தரும் ஐம்புலனேயாம் - சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் ஆகிய இவை ஆசையைத் தருகின்ற அவ்வைம்புலன்களாம். 10 |