(உரை) அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள் - அந்தக் கரணங்களை முறையே சொல்லக்கேள், - அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம் சிந்தை இவை - அம்மனமும் புத்தியும் அகங்காரமும் சித்தமுமாகிய இவையாம், - பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு உற்றது சிந்திக்கும் உணர் - (அவற்றுள் மனம்) பற்றியதனை (புத்தி) நிச்சயித்து (அகங்காரம்) பலமுறை (அபிமானித்து) எழுந்து (சித்தம்) அங்கே யுற்றதனைச் சிந்திக்குமென்று அறிவாய். 16 ஓதியிடும் நாலாறும் உற்றான்ம தத்துவமென்(று) ஆதி அருள்நூல் அறையுங்காண் - தீதறவே வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள் உத்தமனே நன்றா உனக்கு. 17 | (உரை) ஓதியிடும் ... அறையுங்காண் - சொல்லப்பெற்ற இருபத்து நாலும் பொருந்தி ஆன்ம தத்துவமாமென்று சிவாகமநூல் சொல்லும், - உத்தமனே வித்தியாதத்துவங்கள் தம்மை உனக்கு தீது அறவே நன்றா விளம்பக்கேள் - உத்தம மாணாக்கனே! வித்தியா தத்துவங்களை உனக்குக் குற்றமற நன்றாகச் சொல்லக்கேளாய். 17 காலம் நியதி கருதும் கலைவித்தை ஏலஇரா கம்புருட னேமாயை - மால்அறவே சொன்னோம் அடைவாகச் சொன்னஇவை தன்னுண்மை உன்னி உரைக்கும்நாம் உற்று. 18 | (உரை) காலம் ... மாயை - காலமும் நியதியும் கருதுகின்ற கலையும் வித்தையும் பொருந்த இராகமும் புருடனும் மாயையுமாம், - மால் அறவே அடைவாகச் சொன்னோம் - (இவற்றை) மயக்கமற முறையாக (உனக்கு)ச் சொன்னோம், - சொன்ன இவைதன் உண்மை உற்று உன்னி நாம் உரைக்கும் - கூறிய இவற்றின் உண்மையை உற்றுநோக்கி (இனி) நாம் சொல்லுவோம். 18 எல்லை பலம்புதுமை எப்போதும் நிச்சயித்தல் அல்லல் தருங்கிரியை ஆன்மாவுக்(கு) - ஒல்லை அறிவாசை ஐம்புலனும் ஆரவருங் காலம் குறியா மயக்கென்று கொள். 19 | |