பக்கம் எண் :

3

     (பொ - ரை) ஆதிமுதலிருந்த மெய்யான திருவாக்காகவும்
ஒளியாகவும் இவ்வுலகத்துக்கு வந்தவரான காதல் மைந்தனைக்
கருணையினாற் தந்து பூதலத்திற்கு இரட்சிப்பைப் புதுப்பித்துண்டாக்கிய
பரமதந்தையின் பாதத்தை நமது சிரசிற்கு அலங்காரமாக்குவாம்.

     (வி - ரை) திருவாக்கென்றது ஆதியில் தேவனோடிருந்ததும்
தேவனாயிருந்ததுமான வார்த்தையை. ஒளி என்றது இவ்வுலகத்தை மூடிய
அஞ்ஞான அந்தகாரத்தை ஒழித்து தேவஞானத்தை உதிப்பிக்கின்ற
ஞானசூரியனாகிய எம்பெருமானை. இது கலிவிருத்தம். வாய்பாடு : - மா
-விளம் - விளம் - விளம்.

 
   

               வேறு

கன்னி பாலனாய்க் காசினி தனிலவ தரித்து
மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்
தன்னு யிர்ப்பரித் தியாகமுஞ் சிலுவையிற் றந்த
என்னு பாசனா மூர்த்தியை யஞ்சலித் திடுவாம். 5

     (பொ - ரை) கன்னிமரியாளின் பாலகனாய் இந்த உலகத்தில்
அவதரித்து, நிலைபெற்ற ஜீவகோடிகளெல்லாம் விண்ணுலகக்கதியைப்
பெறும்படிக்குத் தன் ஜீவனையும் பலியாகச் சிலுவையிற்கொடுத்த எனது
வழிபடுதெய்வமாகிய இரக்ஷண்ய மூர்த்தியை அஞ்சலிசெய்வாம்.

     (வி - ரை) முதல் நான்குபாட்டாலும் திரியேகத்துவத்தின் முதல்
அம்சமாகிய பிதாவை வணங்கியவர் மேல் வரும் இரண்டு பாடல்களாலும்
இரண்டாம் அம்சமாகிய குமாரனை ஸ்துதிக்கின்றார். அஞ்சலித்தல் என்பது
சிரமேல் கரந்தூக்கிக் கைகூப்பித் தொழுதல். இப்பாடல் கலிநிலைத்துறை.
   

            வேறு

வானமும் பூமியும் மகிழ்கொண் டோங்கிட
ஞானமு நன்மையு நனிசி றந்திட
ஊனமும் பாவமு மொழியத் தோன்றிய
தீனர க்ஷகன்பதஞ் சிந்தித் தேத்துவாம். 6

     (பொ - ரை) வானலோகமும் பூலோகமும் மகிழ்ச்சிகொண்டு
ஓங்கத் தக்கதாகவும், ஞானமும் நன்மையும் மிகுதியாகச்
சிறக்கத்தக்கதாகவும், குறைவும் பாவமும் ஒழியத்தக்கதாகவும்
இவ்வுலகத்தில் தோன்றிய, பல ஹீனரைக் காப்பாற்றும் இரக்ஷகனுடைய
பாதங்களைச் சிந்தனைசெய்து ஸ்தோத்திரிப்போமாக.

 
   

            வேறு

சுருதியொளி யகந்திகழ்த்தி யஞ்ஞான திமிரமறத்
     துரந்தெஞ் ஞான்றும்
ஒருதனி ரக்ஷணியவழித் துணையாகி யடியோமை
     யுய்யக் கொண்டு