பக்கம் எண் :

4

   

கருதியநற் கருமமெலாங் கைகூடப் பெருங்கருணைக்
     கடைக்கண் ணோக்கந்
தருதிரியே கத்தொருநல் லாவிதிரு வடிக்கமலந்
     தலைமேற் கொள்வாம். 7

     (பொ - ரை) வேதவெளிச்சத்தை இருதயத்துள் பிரகாசிக்கச்செய்து
அஞ்ஞானமாகிய இருள் கெடும்படி அதை நீக்கி, எப்பொழுதும் ஒப்பற்ற
இரக்ஷணியவழிக்குத் துணையாகி, அடியேங்களை இரட்சிப் பதையே
குறியாகக்கொண்டு, கருதிய நல்ல கருமமெலாம் கைகூடத்தக்கதாக பெரிய
கருணையாகிய கடைக்கண்ணோக்கத்தைத் தந்தருளுகின்ற
திரியேகத்திலொருவரான நல்ல ஆவியின் திருவடித்தாமரைகளைச் சிரசின்
மேற் கொள்வாம்.

     (வி - ரை) இவ்வொருபாட்டால் திரியேகத்துவத்தின் மூன்றாம் அம்சமாகிய பரிசுத்தாவியை வணக்கஞ்செய்கின்றார். இஃது அறு சீராசிரிய
விருத்தம். நாலு காய்களும் இரு மாவும் (- - காய் - - காய் - -
காய் - - காய் - மா தேமா) ஆகிய ஆறுசீர்கள் கொண்டுவருவது.

 
   

             வேறு

பத்த பாலனஞ் செய்திருள் பாறிட
வித்த கச்சுடர் வீசி விளங்கிடும்
மெய்த்தி ருச்சபை மெய்த்திருத் தொண்டரைச்
சித்த மீது திகழ்த்தி விளம்புவாம். 8

     (பொ - ரை) பத்தர்களைப் பரிபாலித்து அஞ்ஞானமாகிய இருள்
கெடும்படிக்கு ஞானஜோதி வீசிவிளங்குகின்ற மெய்த்திருச்சபையின்
உத்தம திருத்தொண்டரை நம்முடைய சித்தத்திலிருத்தி இந்நூலைச்
சொல்லுவாம்.

     (வி - ரை) திரித்துவத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் வணங்கியவர்
இப்பாட்டில் அடியார்வணக்கஞ் செய்கின்றார். இது கலிவிருத்தம்.

 
   

             காரணம்

பூவரு மெய்ம்மறைத் துணிபின் பொற்புறழ்
ஜீவர க்ஷணியயாத் திரிகச் செம்பொருள்
பாவரு செந்தமிழ்ப் பனுவ லாக்குவான்
ஆவலிற் றுணிந்தன னருட் டுணைக்கொடே. 9

     (பொ - ரை) அழகுதங்கிய சத்தியவேதத் துணிபின் பொற்பமைந்த
ஆத்மீக ரக்ஷணிய யாத்திரிக மென்னுஞ் சிறந்த விஷயத்தை
பாட்டுகளினாலாகிய செந்தமிழ்க் காவியமாகச் செய்யும்படி
தேவதிருவருளின் துணையைக்கொண்டு ஆவலாகத் துணிந்தேன்.