பக்கம் எண் :

சீறாப்புராணம்

100


முதற்பாகம்

224. வந்து நல்வழிக் குரியவ ரிக்குமக் காவிற்

    சந்த னப்புய னப்துல்லா தனைமணம் புரியச்

    சிந்தை நேர்ந்தன ளவ்வுரை கேட்டுளந் திடுக்கிட்

    டிந்த வூருளர் மிகுதிபேர் மணத்தினுக் கிசைந்தார்.

59

     (இ-ள்) அப்பெண் சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் வசிக்கும்படியான மக்கமாநகரத்தின்கண் வந்து சந்தனக் குழம்பு பூசிய புஜங்களையுடைய அப்துல்லா அவர்களை விவாகஞ் செய்துக் கொள்ள வாக்கு நேர்தலன்றி மனத்தோடு முடன்பட்டிருந்தனள். அவ்வாறுற்றாளென்னும் சமாச்சாரத்தை இந்த வூரிலுள்ளவர்க ளெல்லாவரும் கேள்வியுற்று மிகுந்தபேர்கள் ஆ! ஈதென்ன விபரீதமென்றேங்கித் தாங்களும் அப்துல்லா அவர்களை விவாகஞ் செய்துக் கொள்வதற்குச் சம்மதித்தார்கள்.

 

225. எனக்கு னக்கென மடந்தையர் மணத்தினுக் கிகலத்

    தனக்கு நேரிலா னெழுதிய படிதனி முடிந்து

    வனக்க ருங்குழ லாமினா வெனுமட மானைச்

    சினக்கும் வேற்கரத் தப்துல்லா மணத்தொடுஞ் சேர்ந்தார்.

60

     (இ-ள்) அவ்வாறாகப் பிரியப்பட்டுள்ள பெண்களெல்லாவரும் விவாகத்திற்கு அப்துல்லா எனக்காயிருப்பர்; உனக்காயிருப்பரென்று சொல்லி ஒருவர்க்கொருவர் பகைக்கத் தனக்கு நிகரில்லாதவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் ஆதிகாலத்தி லெழுதியபடி அவ்விவாகத்தினியதி ஒப்பற்றதாய் முடிந்து பகைவற்மேற் கோபியாநிற்கும் வேலாயுதந்தங்கிய கையினையுடைய அப்துல்லாவானவர் அழகிய கரிய கூந்தலையுடைய ஆமினாவென்னு மிளமானை விவாகத்தோடுஞ் சேர்ந்தார்கள்.

 

226. அந்த வாறறிந் தரிவைய ரிந்நக ரனைத்து

   மிந்து வாணுத லாமினா மனைவெறுத் திருந்தார்

   கந்த மென்குழல் கருப்புமு முதிர்ந்தன காலம்

   வெந்து வானவர் பிறரிலை யென்கொலோ விளைவே.

61

     (இ-ள்) அப்துல்லா ஆமினா அவர்களை விவாகஞ் செய்துக் கொண்ட அவ்வரலாற்றை யறிந்து விவாகத்திற்கு மனமிசைந்திருந்த மற்றப் பெண்களும் இம்மக்கமாநகர் முழுவதும் இளஞ்சந்திரனைப் போலுமொளி தங்கிய நெற்றியையுடைய ஆமினா அவர்களின் வீட்டை வெறுத்திருந்தார்கள். வாசனை பொருந்திய மென்மையான கூந்தலையுடையராகிய ஆமினாவினது கருப்பத்தின் காலமு முற்றியது. சுற்றத்தாரானவர்கள் தாய் முதலிய இரண்டொருவரன்றிப் பிறர்