பக்கம் எண் :

சீறாப்புராணம்

99


முதற்பாகம்
 

பெரிய பிரகாசம் நிறைந்த தமது முகமானது மலரும்படி சபாவெனும் பெண்ணானவர் சீர்தூக்கிச் சொல்லுவார்.

 

221. திரிந்த பாலெனச் செறுத்துப்பண் ணேழையுஞ் சினந்து

    விரிந்த தெண்டிரைக் கடலிடை யமுதென விளங்கிச்

    சொரிந்த தேன்மொழி யாமினா வயிற்றினிற் சூலா

    யிருந்த நாளெலாங் கனவலா லொழிந்தநா ளிலையே.

56

     (இ-ள்) இயற்கை மாறிய பாலைப் போலவும் விரிவாகிய தெள்ளிய அலைகளையுடைய சமுத்திரத்தின் கண் உண்டாகும் அமுதத்தைப் போலவும் இசைகளேழனையும் கோபித்து வெறுத்து விளக்கமாய்த் தேனைச் சொரிந்த சொற்களையுடைய ஆமினா அவர்களினது வயிற்றின்கண் கருப்பமுண்டாயிருந்த நாட்களிலெல்லாம் சொப்பனங் காண்டலேயல்லாமல் இல்லாதிருந்த நாளொன்றுமில்லை.

 

222. உள்ள கங்குளிர்ந் தருமறை மூன்றையு முணர்ந்தோர்

    வள்ள லாகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய்ப்

    பிள்ளை யொன்றுதோன் றிடுமுகம் மதுவெனும் பெயரி

    னெள்ள லின்றிய வுண்மைநன் னபியென விசைத்தார்.

57

     (இ-ள்) அரிய தௌறாத்து சபூறு இஞ்சீல் என்னும் மூன்று வேதங்களையும் தெளிந்த பண்டிதர்கள் அவ்வேதங்கள் கூறியவாற்றானே மனத்தின்கண் சந்தோஷப் பெருக்கால் மிக்கக் குளிர்ச்சியுற்று ஒருபிள்ளையானது அழகாய் வரையாது கொடுக்குந் தகைமையினரான அப்துல்லாவினது வயிற்றின்கண் உற்பத்தியாகி இவ்வுலகத்தில் வெளிப்படும். அப்பிள்ளை முஹம்மதுவென்னும் பெயரினதாகிய இகழ்வில்லாத உண்மையான நல்ல நபியாகுமென்று சொன்னார்கள். 

 

223. சொரியும் பூந்துகட் டுடவைசூழ் சாமினிற் றோன்ற

    லரிவை தன்னகத் தறிவினுந் தேர்ந்துணர்ந் தறிந்து

    தெரியக் கூறிய பெரியவர் சொல்லினுந் தெளிந்து

    வரிசை நேருமக் காவினில் விரைவினில் வந்தாள்.

58

     (இ-ள்) சொரியாநிற்கும் பூக்களது மகரந்தத்தையுடைய சோலைசூழும் ஷாமிராஜியத்து இராஜனது மகளாகிய வொருபெண் மேற்படி பண்டிதர்கள் சொன்ன சொல்லைக் கேட்டு அதனுண்மையைத் தனது மனத்தறிவாலும் தெரியும்படி சொன்ன முதியோர்களது சொல்லாலும் ஐயந்திரிபற ஆராய்ந்தறிந்து தெளிந்து அதற்காக வேண்டி வரிசை பொருந்துமிந்த மக்கமாநகரத்திற்கு அதிசீக்கிரத்தில் வந்தாள்.