பக்கம் எண் :

சீறாப்புராணம்

1003


இரண்டாம் பாகம்

மெய்ம் மார்க்க நிலைமை யானது எவ் விடத்தும் பரவவும், ஆகாயத்தின் கண் ஓரோசையானது விஜயத்தைக் கொண்டு பாட்டினது தொடர்பாக ஒலித்தது.

 

2697. மரும லர்ப்பொழின் மதீனத்தி னேகுமவ் வழியி

     லிருவர் வந்தொரு முல்லையம் பாடிய னிறங்கிப்

     புரிவெண் ணூற்குழன் முதியவண் மனையிற்புக் கிருந்து

     விரியுங் காரணப் புதுமைகள் பலபல விளைத்தார்.

22

      (இ-ள்) வாசனையைக் கொண்ட புஷ்பங்களின் சோலைகளையுடைய திரு மதீனமா நகரத்திற்குச் செல்லுகின்ற அந்தப் பாதையின் கண் இருவர்கள் வந்து முல்லை நிலத்தினது அழகிய ஓரிடைச் சேரியிலிறங்கி முறுக்கைப் பொருந்திய வெண்ணிறத்தைக் கொண்ட நூலைப் போன்ற நரைத்த கூந்தலையுடைய ஓர் விருத்தையினது வீட்டின் கண் புகுந் துறைந்து பரவா நிற்குங் காரணங்களை யுடைய பற்பல அற்புதங்களைச் செய்தார்கள்.

 

2698. கதிகொள் காரணங் கண்டுகண் களித்தவ ணிருந்த

     பொதுவர் தங்குலத் தொடுமிசு லாமினிற் பொருந்தி

     யதிவி தத்தொடுந் தீனிலைக் குரியவ ராகிப்

     பதவி பெற்றுநற் செல்வமும் வளம்பெறப் படைத்தார்.

23

      (இ-ள்) அவ்வாறு செய்த பதவியைக் கொண்ட அக் காரணங்களை அந்த இடைச் சேரியின் கண்ணுறைந்த இடையர்கள் தங்களது கூட்டத்தோடும் பார்த்து நயனங்களானவை மகிழ்ச்சி யடையப் பெற்றுத் தீனுல் இஸ்லா மெனும் மெய்ம் மார்க்கத்திற் சேர்ந்து அதிவிதத்துடன் தீனினது நிலைபரத்திற் குரிமையர் களாகிய மோட்சத்தைப் பெற்று நல்ல செல்வத்தையும் செழுமையுற அடைந்தார்கள்.

 

2699. பலாப லன்றருந் தீனிலை மறுத்தவர் பலர்க்கும்

     பலாய டைந்ததென் றிரும்பொருள் பிறந்திடும் வசனங்

     குலாவும் வெங்குபிர்த் தலைவர்கள் செவியினிற் குறுகக்

     கலாம திக்கதி ரறுமிரு ளெனமுகங் கரிந்தார்.

24

      (இ-ள்) மிகுத்த பிரயோசனத்தைத் தருகின்ற தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது நிலைமையை மறுத்தவர்களான பல்லோர்க்கும் துன்பமானது வந்து சேர்ந்த தென்று பெருமையை யுடைய அர்த்தமான துண்டாகப் பெற்ற அவ்வார்த்தைகளானவை பிரகாசியா நிற்குங் கொடிய காபிர்களினது தலைமைத் தனத்தையுடையவர்களின் செவிகளிற் போய்க் கேட்கவே, அவர்கள் கிரணங்களை யுடைய சந்திரனது பிரகாச மற்ற இருளைப் போலும் முகங்களானவை கருகப் பெற்றார்கள்.