பக்கம் எண் :

சீறாப்புராணம்

1006


இரண்டாம் பாகம்
 

முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் இதயத்தினது மகிழ்ச்சியானது விளங்கும் வண்ணம் பொருந்திய தங்களின் சரீரத்தின் கண் விட்ட நல்ல பிராணனைப் போன்று வந்து சேர்ந்தார்கள்.

 

2705. வான கத்துடுக் கணத்திடை நடுவெழு மதிபோற்

      கான வேங்கைக ணடுவருங் கேசரி கடுப்பச்

      சோனை மாமுகிற் கவிகைநுண் டுவலைக டூற்ற

      நான மெத்திசை யினுங்கமழ் தரநபி நடந்தார்.

4

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு வந்து சேர, நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஆகாயத்தி னிடத்து நட்சத்திரக் கூட்டத்தினது மத்தியின் கண் எழா நிற்கும் சந்திரனைப் போன்றும், காட்டினிடத்துள்ள புலிகளின் மத்தியில் வருகின்ற சிங்கத்தைப் போன்றும், விடாமழையைப் பெய்யுகின்ற பெருமை பொருந்திய மேகக் குடையானது நுண்ணிய துளிகளைப் பொழியவும், திக்குகளெல்லாவற்றிலும் கத்தூரி வாசனை யானது பரிமளிக்கவும், நடந்து சென்றார்கள்.

 

2706. உகளும் வாளைகண் டனப்பெடை யொதுங்கும்வா விகளு

     முகில டைந்துகண் படுத்தபைம்  பொழில்களு முன்னிப்

     புகைத வழ்ந்தவெண் மாளிகைப் புறம்பல செறிந்து

     திகழும் பொன்னகர் மதீனமுந் தெரிதரச் சென்றார்.

5

      (இ-ள்) அவ்விதம் சென்று பாயா நிற்கும் வாளை மீன்களைப் பெட்டை யன்னங்கள் பார்த்து ஒதுங்கின்ற தடாகங்களையும், மேகங்களானவை நெருங்கி வந்து துயிலுகின்ற பசிய சோலைகளையும், சமீபித்துத் தூம மானது தவழப் பெற்ற வெண்ணிறத்தை யுடைய பல மாளிகையினிடங்கள் நெருக்க முற்றுப் பிரகாசிக்கும் பொற்பதியாகிய திரு மதீனமா நகரமும் தோற்றும்படி போயினார்கள்.

 

கலிவிருத்தம்

 

2707. வடவரை பொருவன மலிந்த மேனிலைக்

     கடலென வொலித்ததா வணத்தின் கம்பலைப்

     புடவியை யளந்தன போன்ற வீதிக

     ளிடனற நெருங்கின மாட மெங்குமே.

6

      (இ-ள்) அங்கு பொலிந்த மேனிலைக ளானவை மகா மேருப் பருவத்தைப் பொருவின, கடை வீதிகளின் ஓசை யானது சமுத்திரத்தைப் போலுஞ் சத்தித்தது, தெருக்கள் இப் பூமியை அளப்பதை நிகர்த்தன, எவ்விடத்தும் இட மில்லாது மாளிகைகள் செறிதலுற்றன.