பக்கம் எண் :

சீறாப்புராணம்

1007


இரண்டாம் பாகம்
 

2708. கலைவலார் மறையவர் கருத்தி லெண்ணிய

     திலையெனா தரும்பொரு ளியாவு மெய்தலான்

     மலைவிலா தருளிய வள்ளி யோரினுந்

     தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்.

7

      (இ-ள்) அன்றியும், பழமையை யுடைய அந்தத் திரு மதீனமா நகர மானது சாத்திரத்தின் வல்லுநர்களும் வேதியர்களும் தங்களின் இதயத்தின் கண் கருதியவற்றை இல்லை யென்று சொல்லாமல் அந்த அருமையான பண்டங்கள் யாவையும் பொருந்துவதினால் ஒப்பின்றிக் கொடுக்கும் வள்ளன்மையை யுடையவர்களைப் பார்க்கிலும் கெடாத பெரிய கீர்த்தியைச் சம்பாதித்தது.

 

2709. தோரணத் தொடுங்கொடிக் காடு துன்னலால்

     வாரண மதமலை மலிந்து நிற்றலாற்

     காரணத் தொடும்வர வாறு காணலாற்

     பூரணப் புவியெனப் பொலிந்த பொன்னகர்.

8

      (இ-ள்) அன்றியும், அழகிய அத் திரு மதீனமா நகர மானது தோரணங்களுடன் துவஜத்தினது வனமானது நெருங்குவதாலும், உன்மதத்தைக் கொண்ட யானைகள் பெருகி நிற்பதாலும், காரணத்துடன் வரவினது ஒழுங்குகள் தெரிவதாலும், நிறைவையுடைய பூமியைப் போன்று பொங்க முற்றது.

 

2710. சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலாற்

     புதுமலர்த் தெருத்தொறுஞ் சிந்திப் பொங்கலா

     லெதிர்பணிந் திடுவிருந் தினிதி னல்கலால்

     வதுவையின் மனையென விருந்த மாநகர்.

9

      (இ-ள்) அன்றியும், பெருமையை யுடைய அந்தத் திரு மதீனமா நகரம் வெண் சுண்ணச் சாந்தினது பிரகாசத்தைக் கொண்ட மாளிகைகள் ஒளிவுற்று விளங்குவதாலும், வீதிகளெல்லாவற்றிலும் புதிய புட்பங்கள் சிதறுண்டு ஓங்குவதாலும், எதிராய்த் தாழ்ந்து கொடா நிற்கும் விருந்தானது இனிமையுடன் கொடுத்தலாலும், விவாகத்தினது வீட்டைப் போன்றிருந்தது.

 

2711. உறுபகை வறுமைநோ யோட வோட்டிமேற்

     குறைவற மனுமுறைக் கோன டாத்திநீ

     ணிறைதரு பெரும்புகழ் நிலைநி றுத்தியோர்

     மறுவிலா தரசென விருந்த மாநகர்.

10

      (இ-ள்) அன்றியும், பெருமையை யுடைய அந்தத் திரு மதீனமா நகரம் மிகுந்த விரோதமாகிய தரித்திர மென்னும் வியாதியை விரைந்து செல்லும்படி ஓடச் செய்து அதன் பின்னர்த் தாழ்வில்லாது மானுஷிய ஒழுங்கினை யுடைய செங்கோலைச்