பக்கம் எண் :

சீறாப்புராணம்

1010


இரண்டாம் பாகம்
 

2719. மாதவ நபியிவண் வருகின் றாரெனக்

     காதினிற் கேட்டலுங் களித்தன் சாரிகள்

     சீதவொண் கவிகையின் றிசையை நோக்கியப்

     பாதையி னிடமறப் பற்றி யேகினார்.

18

      (இ-ள்) மகா தவத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இந்தத் திரு மதீனமா நகரத்திற்கு வருகின்றார்க ளென்று அவன் கூறி, அவ் வார்த்தைகளை அம் மதீனமா நகரத்தின் கண்ணுள்ள அன்சாரிகள் செவிகளினாற் கேள்வியுற்ற வளவில் மகிழ்ச்சி யடைந்து பிரகாசத்தை யுடைய மேகக் குடையினது திசையைப் பார்த்து அவ்வழியின் தானமானது இல்லாமலாகும் வண்ணம் அதைப் பிடித்து நடந்தார்கள்.

 

2720. ஒருவருக் கொருவர்முன் னோடி யாவரும்

     வருபவ ரிவ்வழி விரைவின் வம்மென

     விருளறு மனத்தரா யெதிர்ந்து சென்னெறித்

     திருநபி பதத்தினிற் சென்னி சேர்த்தினார்.

19

      (இ-ள்) அவ்வாறு நடந்த அவர்கள் யாவரும் தங்களில் ஒருவருக்கொருவர் முன்னாக விரைந்து சென்று வருவோர்கள் இம் மார்க்கத்தோடும் சீக்கிரத்தில் வாருங்க ளென்று அந்தகார மற்ற அகத்தையுடையவர்களாய் எதிர்த்துச் சென்ற பாதையி னிடத்துத் தெய்வீகந் தங்கிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சரணங்களில் தங்களின் தலைகளை வைத்துப் பொருந்தி வணங்கினார்கள்.

 

2721. துன்னிய திரைக்கடற் றோழர் நாப்பணி

     னந்நபி பதங்களைப் போன்ற நாடிய

     மன்னவர் களிப்பினா னோக்கு மாமுகப்

     பொன்னிதழ்த் தாமரைக் காடு பூத்ததால்.

20

      (இ-ள்) அவ்வாறு பொருத்தி வணங்கி அரசர்களான அவர்கள் தங்கள் மனதினிடத்து விரும்பிய மகிழ்ச்சியால் பார்க்கா நிற்கும் பெருமை பொருந்திய முகமாகிய அழகிய இதழ்களை யுடைய தாமரையினது வன மானது மலர்ந்ததினால் நெருங்கிய அந் நேசர்களான அலைகளை யுடைய சமுத்திரத்தினது மத்தியில் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சூரியனை நிகர்த்தார்கள்.