பக்கம் எண் :

சீறாப்புராணம்

1011


இரண்டாம் பாகம்
 

2722. அல்லெனுங் குபிர்க்கச டறுத்து தீனெறி

     யெல்லவ னெனவருந் தூத ரியாரையு

     மல்லணி மார்புறத் தழுவி மான்மத

     வில்லுமிழ் மேனியும் புயமும் வீங்கினார்.

21

      (இ-ள்) அன்றியும், அந்தகார மென்று கூறும் குஃப்று ஆகிய கசட்டைக் கண்டித்துத் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தின் சூரியனைப் போன்று வந்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அங்கு வந்த யாவரையும் வல்லமையையும் பூ மாலையையு முடைய தங்களின் நெஞ்சானது பொருந்தும் வண்ணம் கட்டிச் சார்ந்து கத்தூரி வாசனையைக் கொண்ட பிரகாசத்தைச் சிந்தா நிற்கும் சரீரமும் தோள்களும் பொலியப் பெற்றார்கள்.

 

2723. இடரறுத் தடைந்தமு காசி ரீன்களு

     மடலுறும் வேற்கையன் சாரி மார்களு

     முடனுவந் தொருவருக் கொருவ ரவ்வயி

     னிடனுறக் காந்தமு மிரும்பு மாயினார்.

22

      (இ-ள்) அன்றியும், தங்களின் துன்பங்களைக் கண்டித்து அங்கு வந்து சேர்ந்த முகாஜிரீன்களும் வெற்றியைப் பொருந்திய வேலாயுதத்தைத் தாங்கிய கையை யுடைய அன்சாரிகளும் ஒருவருக் கொருவர் தங்களில் விருப்பமுற்றுப் பெருமை பொருந்தும் வண்ணம் அவ்விடத்தில் காந்தத்தையும் இரும்பையும் போலானார்கள்.

 

2724. வரிசிலைக் குரிசிலு மதீன மன்னருங்

     கருதலர்ச் செகுக்குமு காசி ரீன்களுந்

     தருவென வருமபூ பக்கர் தம்மொடு

     மரியவ னருளொடும் புறப்பட் டார்களால்.

23

      (இ-ள்) அவ்விதமாக நீட்சியைக் கொண்ட கோதண்டத்தையுடைய எப் பொருட்கு மிறைவரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் திரு மதீனமா நகரத்தினது அரசர்களும் சத்துராதிகளைக் கொல்லா நிற்கும் முகாஜிரீன்களும், கற்பகச் சோலையைப் போன்று வந்த அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களுடன் அரியவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் கிருபையோடும் அவ்விடத்தை விட்டும் புறப்பட்டார்கள்.