பக்கம் எண் :

சீறாப்புராணம்

1016


இரண்டாம் பாகம்
 

தங்கிய அவ்விடத்தில் அன்பானது பொருந்தும் வண்ணம் அவ்வாறு நான்கு நாள் தங்கியிருந்து பின்னர் அவர்களுக்குப் பாலைப் பார்க்கிலும் இன்பத்தைக் கொண்ட வார்த்தைகளை நன்மையுடன் கற்பித்தார்கள்.

 

2738. அத்தலத் துறைந்துபி னடுத்த வெள்ளிநா

     ளுத்தமத் தமரொடவ் வுறைந்த பேர்கட்கு

     மித்தலத் தின்றுதொட் டீறு நாண்மட்டுங்

     குத்துபா வெனநபி குறித்துக் காட்டினார்.

37

      (இ-ள்) நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு அந்தத் தானத்தின் கண் தங்கியிருந்து பின்னர் வந்து பொருந்திய வெள்ளிக் கிழமையைத் தினம் மேன்மையை யுடைய தங்களின் கூட்டத்தார்களோடும் அங்கு தங்கியிருந்த ஜனங்களுக்கு இவ் விடத்தில் இன்று முதல் கியாம நாள் பரியந்தம் குத்துபா வென்று குறிப்பிட்டுத் தெரிவித்தார்கள்.

 

2739. மாமுகிற் குடைநபி வகுத்த வாசகந்

     தேமலர்ப் புயத்தவ ரியாருஞ் சிந்தித்துப்

     பூமரு வண்டெனப் பொலிய நந்நபி

     தோமில்வண் குத்துபாத் தொழுவித் தாரரோ.

38

      (இ-ள்) பெருமை பொருந்திய மேகக் குடையை யுடைய நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளைத் தேனைக் கொண்ட புஷ்பங்களினாலான மாலையை யணிந்த தோள்களை யுடைய அந்த அசுஹாபிமார்களியாவரும் இதயத்தின் கண் கருதி மலரினிடத்துப் பொருந்தா நிற்கும் வண்டைப் போலும் வந்து செறிய, நமது நாயகம் அந் நபிகட் பெருமானவர்கள் குற்ற மற்ற அழகிய ஜீமுஆ குத்துபாவை ஓதித் தொழுவித்தார்கள்.

 

2740. தூயவன் றூதரென் றெவர்க்குஞ் சொன்னிறீஇத்

     தேயமெங் கணும்பெருந் தீனை வித்திய

     நாயக முகம்மது நாட்கொண் டவ்விடத்

     தேயுயர் குத்துபா வியற்றி னாரரோ.

39

      (இ-ள்) அன்றியும், பரிசுத்தத்தை யுடையவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் றசூ லென்று யாவருக்கும் அவ் வார்த்தையை நிற்கச் செய்து உலகத்தினது எவ் விடத்தும் பெருமையைக் கொண்ட தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை விதைத்த நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்