பக்கம் எண் :

சீறாப்புராணம்

1018


இரண்டாம் பாகம்
 

அந்தத் திரு மதீனமா நகரத்தாரான அசுஹாபிமார் நெருங்கிக் கைகளாற் பிடித்து அவரவர்களின் உவகையினது செய்கையினாற் சத்தித்து விடுத்திலர்.

 

2744. பொன்மனை யிடத்தவர் பொங்கி யாவரு

     மென்மனை யிடத்திற்கொண் டேகு வேனெனத்

     தன்மனக் களிப்பினாற் சாற்றி வாகனத்

     தின்மணிக் கயிற்றினை யீர்க்கின் றார்களால்.

43

      (இ-ள்) மோட்ச வீட்டினது தானத்தை யுடைவர்க ளான அந்தத் திரு மதீனமா நகரத்தின் அசுஹாபிமார்கள் யாவரும் அவ்வாறு பொலிந்து எனது வீட்டின் கண் கூட்டிக் கொண்டு செல்குவே னென்று தனது மனச் சந்தோஷத்தினாற் கூறி வாகன மாகிய அந்த ஒட்டகையினது அழகிய கயிற்றை யிழுத்தார்கள்.

 

2745. வித்தக முகம்மதின் விருப்பின் மாட்சியாற்

     றத்தமில் கொடுபுகச் சார்ந்த மன்னவ

     ரத்தனை பெயரையு நோக்கி யத்திரி

     சித்திர மெனத்தனி சிறந்து நின்றதால்.

44

      (இ-ள்) ஞானத்தைப் பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் உவகையினது சிறப்பால், அவர்களைத் தங்கள் தங்கள் வீட்டின் கண் கொண்டு செல்லும் வண்ணம் அவ்வாறு வந்து பொருந்திய அரசர்களான அந்த அசுஹாபிமார்களெல்லாரையும் அவ்வொட்டக மானது பார்த்துச் சித்திரப் பாவையைப் போலும் ஒப்பறச் சிறப்புற்று நின்றது.

 

2746. கடுவிசைப் பரியினுங் கடிய வேகமாய்க்

     கொடுவருஞ் சோகினைக் கூண்டி யாவருந்

     தொடுவதன் றெனக்கரந் தூண்டிப் பாசத்தை

     விடும்விடு மெனநபி விளம்பி னாரரோ.

45

      (இ-ள்) நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கடிய வேகத்தை யுடைய குதிரையைப் பார்க்கிலும் வெவ்விய விரைவாகக் கொண்டு வந்த அந்த ஒட்டகத்தை யாவருங் கூடிப் பிடிப்பது நல்ல தல்ல வென்று சொல்லிக் கையினாற் சுட்டிக் கயிற்றை விடுங்கள்! விடுங்கள்!! என்று கூறினார்கள்.

 

2747. பிடிபடுங் கயிற்றினைப் பிடித்து நீவிர்கட்

     டடைபடுத் திடிலது சார்ந்தி டாதுநம்

     முடையநா யகன்றிரு வுளத்தி னுன்னியே

     வடிவுறு மொட்டகம் வருவ தீண்டரோ.

46