பக்கம் எண் :

சீறாப்புராணம்

1027


இரண்டாம் பாகம்
 

2773. அந்தமு முடிவ மில்லா வரியவர்க் குரிய தூதர்

     வந்தமா வரவா றெல்லாம் வகுத்தெடுத் துரையா நின்றீர்

     சந்திர வதன வள்ள றனைக்கண்ணாற் றெரிசித் துண்டோ

     வெந்தைகேட் டிசைக்கு மாறோ யாதெடுத்தியம்பு மென்றார்.

6

      (இ-ள்) அன்றியும், நீங்கள் முதலுங் கடையு மில்லாத அருமையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினுக்குச் சொந்தமாகிய றசூ லான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இவ் வுலகத்தினிடத்துத் தோற்ற மாகிய பெருமை பொருந்திய வரலா றெல்லாவற்றையும் பிரித்தெடுத்துக் கூறினீர்கள். சந்திரனை நிகர்த்த முகத்தை யுடைய வள்ள லான அந் நபிகட் பெருமா னவர்களைக் கண்களினாற் பார்த்த துண்டா? எனது பிதா வாகிய பண்டிதன் கேள்வி யுற்றுக் கூறும் விதமாய்க் கூறினீர்களா? இவற்றில் இன்ன தென்று எடுத்து எனக்குச் சொல்லுங்க ளென்று கேட்டார்.

 

2774. புதியதோ ரழகு வாய்ந்து புரவல வேத வாய்மை

     மதிவலோர்க் கேவ லாளாய் மலரடி விளக்கி நாளுந்

     துதிசெய்து பவங்க டீர்த்துத் தொல்வினைப் பகுதி யானற்

     கதிபெறத் தினம றாது கண்டுகண் களித்தே னென்றேன்.

7

      (இ-ள்) அவ்வாறு கேட்க, யான் நூதன மாகிய ஒப்பற்ற சுந்தரமானது சிறக்கப் பெற்ற அரச ரானவரே! வேதங்களினது சத்தியத்தைக் கொண்ட ஞான வல்லுநராகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது அஹ்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குப் பணிவிடை யியற்றுந் தொண்டனாக அவர்களின் தாமரைப் புட்பத்தை நிகர்த்த சரணங்களை விளக்கஞ் செய்து பிரதி தினமும் புகழ்ந்து எனது பாவங்களை யில்லாமற் செய்து பழவினை யினது இயல்பினால் நன்மை பொருந்திய மோட்சத்தைப் பெறும் வண்ணம் நாளும் மாறாமற் பார்த்துக் கண்களானவை மகிழ்ச்சி யடையப் பெற்றே னென்று சொன்னேன்.

 

2775. கண்டன னென்னு மாற்றஞ் செவிப்புக கபீபைத் தேடிக்

    கொண்டுற நடந்த பொற்றா ளிதுகொலோ வென்னக் கூறி

    முண்டக மலரின் வாய்ந்து முகத்தையென் றாளிற் சேர்த்திப்

    பண்டருந் திருவாய் முத்திப் பற்பல்கான் மோந்து கொண்டார்.

8

     (இ-ள்) அவ்வாறு பார்த்தே னென்று சொல்லும் வார்த்தைகள் அவர் காதுகளிற் போய் நுழையவே, ஹபீ பென்னுங் காரணப்பெயரையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல