பக்கம் எண் :

சீறாப்புராணம்

1048


இரண்டாம் பாகம்
 

வயிறானது பூரண மாகிப் பத்துத் தினத்திற்குப் பசிக்காது. அந்தப் பிரிவில் இந்தப் படி சில தினம் அவற்றை யருந்திச் சரீரமானது மிகவும் பருக்கப் பெற்று எனது தந்தையாகிய அப் பண்டிதன் இட்ட சிறையான அந்தப் பாழ் வீட்டிற் கிருபையோடு மிருந்தேன்.

 

2838. திருந்திலா மதப்பித் தின்னந் தீர்ந்ததோ விலையோ வென்னக்

     கரந்தொரு பானின் றென்னை நோக்கினன் கபீபே நும்பேர்

     வருந்திலா துரைப்பத் தாதை முன்னின்மும் மடங்கா யார்க்கு

     மருந்திடாக் கசப்பு முப்பு மளித்தனன் மேலு மன்றே.

71

      (இ-ள்) அவ்வா றிருக்க, ஹபீ பென்னுங் காரணப் பெயரையுடைய நபிகட் பெருமானே! செவ்வைப் படாத சமயப் பைத்தியமானது எனக்கு இன்னந் தீர்ந்ததா? இல்லையா? என்று எனது தந்தையானவன் ஓரிடத்தி லொளித்து நின்று என்னைப் பார்த்தான். யான் உங்களது திரு நாமத்தை வேதனையின்றிக் கூற, முன்னிலும் மூன்று பங்காகிப் பின்னும் ஒருவருக்கு முண்ணக் கூடாத கசப்பையுடைய அன்னத்தையும் உப்பு ஜலத்தையும் தந்தான்.

 

2839. கொடிதெனு முப்புங் கைப்புங் குவலயத் தினிலில் லாத

     வடிநறா வமுத மாக வினிதுண்டு வருமந் நாளி

     லடிகணா மதீனா மூதூர்க் கெழுந்தரு ளுவதா மாற்றஞ்

     சடுதியி னெந்தை கேட்டுச் சாலையின் வந்து புக்கான்.

72

      (இ-ள்) அவ்விதந் தந்த கொடுமையை யுடைய தென்று கூறா நிற்கும் உப்பு ஜலமும் கசப்பை யுடைய அன்னமும் இப் பூமியின் கண்ணில்லாத தேனான தொழுகப் பெற்ற அமிர்தமாக இனிமையுட னருந்தி வருகின்ற அந்தத் தினத்தில், குருவாகிய நீங்கள் திரு மதீன மென்னும் பழைய நகரத்திற்கு எழுந் தருளுவதான சமாச்சாரத்தை எனது பிதா வானவன் கேள்வி யுற்று என்னை அடைத்திருக்கும் அந்தப் பாழ் வீட்டின் கண் விரைவில் வந்து நுழைந்தான்.

 

2840. காலினில் விலங்குஞ் சேந்த கையினிற் றளையும் பூட்டிச்

     சாலையை விடுத்துக் காலித் தொறுவர்கைச் சாட்டி நுந்தம்

     பாலினிற் கொடுபோ யேற்ற வேலையுட் படுத்து மென்னக்

     கோலிய வெகுளி யோடுங் கொடுத்தன னென்னை யன்றே.

73

     (இ-ள்) அவ்வாறு வந்து நுழைந்து என்னை எனது இரு பாதங்களில் விலங்கும் செந் நிறத்தைக் கொண்ட கைகளிற்றளையும் பூட்டி அடைத்திருந்த அந்தப் பாழ் மனையை விட்டுப் பசுக்களையுடைய இடையர்களின் கைகளிற் சாட்டி இவனை உங்களிடத்திற் கொண்டு சென்று தகுதி யான தொழிலி னுட்படுத்துங்க ளென்று சூழ்ந்த கோபத்தோடு மீந்தான்.