பக்கம் எண் :

சீறாப்புராணம்

1084


இரண்டாம் பாகம்
 

களிப்படைந்து தங்களின் தெய்வீகந் தங்கிய தாமரைப் புஷ்பத்தை யொத்த சரணங்களைத் தெரிசிப்பதற்கு எழும்பினேன்.

 

2915. வள்ள லென்றுத வியநபி முகம்மதுக் கீமான்

     கொள்ளு தற்கிசைந் தனனிவ னெனக்குறிப் பறிந்து

     விள்ள லன்றிமுன் னெனைவிலை கொளுமவர் வெகுண்டு

     தள்ளு தற்கிட மறமற மனத்தொடுந் தடுத்தார்.                       

24

      (இ-ள்) அவ்வா றெழும்ப, இவன் வரையாது கொடுக்கும் வள்ளன்மையை யுடையா ரென்று அருளா நிற்கும் நபி யாகிய முகம்ம தென்பவருக்கு ஈமான் கொள்ளுவதற் குடன் பட்டானென்று அக்குறிப்பை ஆதியில் என்னைக் கிரயமாகப் பெற்ற அவர்கள் தெரிந்து ஒன்றும் பேசாது கோபித்துத் தள்ளுதற் கிடமின்றிக் கெடுதியைக் கொண்ட இதயத் தோடும் என்னை விலக்கினார்கள்.

 

2916. தடுத்துத் தீங்கியற் றியதையுள் ளகத்தினிற் றரித்துப்

     படுத்தும் பாடறி குவமென வவர்கண்முன் பரிவின்

     விடுத்து ரைத்தில னும்பெருந் தீனிலை விருப்பால்

     வடித்த நன்மறை வகுத்திசு லாமினை வளர்த்தீர்.

25

      (இ-ள்) தெளிந்த நன்மை பொருந்திய புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தை வகைப் படுத்திக் கூறித் தீனுல் இஸ்லா மென்ற மெய்ம் மார்க்கத்தை வளர்க்கா நிற்கும் நபிகட் பெருமானே! அவர்கள் அவ்வாறு விலக்கி எனக்குச் செய்த தீமைகளை யான் எனது மனதினுட் பூண்டு இவர்கள் நம்மைப் படுத்துகின்ற துன்பங்களைத் தெரிகுவோ மென்று அவர்களின் முன்னர் உங்களின் பெருமையை யுடைய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்க நிலைமையினது ஆசையால் அன்போடும் ஒன்றும் விட்டுப் புகன்றே னல்லேன்.

 

2917. புதிய மார்க்கமென் றெடுத்தவ னிடத்தினைப் பொருந்தி

     மதிம யங்கின னிவன்றனைப் புறம்விடா வண்ணம்

     பதியி னிற்சிறைப் படுத்தலே கருத்தெனப் பரிவிற்

     சிதைவி லாதெனைக் காவலி னகத்திடைச் சேர்த்தார்.

26

      (இ-ள்) அவ்வாறு புகலாதிருக்க, இவன் நூதனமாகிய சமயமென்று தெரிந்து கொண்டவனாகிய முகம்ம தென்பவனின் சமூகத்தைப் பொருத்தமுற்று அறிவானது மயங்கப் பெற்றான். இவனை வெளியில் விடாதபடி இந் நகரத்தில் காவலுக்குட் படுத்துவதே விவேகமென்று அன்போடும் கெடுதலின்றி என்னைக் காவற் பாட்டை யுடைய ஓர் வீட்டின் கண் சேர்த்து வைத்தார்கள்.