பக்கம் எண் :

சீறாப்புராணம்

1089


இரண்டாம் பாகம்
 

2931. மன்ற றுன்றிய மதுமலர்ப் புயமுகம் மதுவு

     நன்று நன்றென வெழுந்துசல் மானைமுன் னடத்திச்

     சென்று தோழர்க ளுடனொரு துடவையைச் சேர்ந்து

     நின்று கன்றெடுத் திவண்டரு கெனநிகழ்த் தினரால்.

40

      (இ-ள்) அவன் அவ்விதஞ் சொல்ல, வாசனை யானது நெருங்கப் பெற்ற தேனினது புஷ்பங்களினா லான மாலையைத் தரித்த தோள்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்ல மவர்களும் நல்லது! நல்லது!! என்று சொல்லி எழும்பி அந்தச் சல்மா னென்பவனை முன்னால் நடந்து போகச் செய்து தோழர்களாகிய சஹாபாக்க ளோடு தாங்களும் பின்னால் நடந்து போய் ஒரு ஈத்த மரச் சோலையைச் சார்ந்து நின்று கொண்டு கன்றுகளை எடுத்து இங்கு தருவீர்க ளாக வென்று கேட்டார்கள்.

 

2932. ஈத்தங் கன்றுமுந் நூற்றையு மெடுத்தவ ரிருந்த

     மாத்தி ரத்தினின் முன்புவைத் தனர்மன மகிழ்ந்து

     தேத்த தும்பிய மலர்ப்புய மசைதரத் திருத்தும்

     பாத்தி தோறினும் பதுமமென் கரத்தினிற் பதித்தார்.

41

      (இ-ள்) அவ்வாறு கேட்க, முந்நூறு ஈத்தங் கன்றுகளையும் அவர்கள் கைகளினாற் றாங்கி அந் நபிகட் பெருமானவர்கள் தங்கிய சமூகத்தினது முன்னர் வைத்தார்கள். அவைகளை அவர்கள் தங்களின் இதய மானது மகிழ்ச்சி யடையப் பெற்று மது வானது வழியப் பெற்ற புஷ்பங்களினாலான மாலையைத் தரித்த தோள்கள் அசையும் வண்ணம் செவ்வைப் படுத்திய பாத்திகளெல்லாவற்றிலும் தாமரை மலரை நிகர்த்த மெல்லிய கைகளினால் நட்டி வைத்தார்கள்.

 

2933. ஆதி நாயக னபியுட னமைசகு பிகளிற்

     போத மேவிய முதியவ ரொருவரப் புவியிற்

     சோதி வீசிய மரகதப் பாசடை துலங்குந்

     தீதி லாதொரு கன்றுநட் டினரவண் சிறப்ப.

42

      (இ-ள்) அவ்வாறு வைத்த யாவற்றிற்கு முதன்மையைக் கொண்ட நாயகனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் நபியாகிய நாயகம் நபிகட் பெருமானார் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடு அங்கு அமைந்திருந்த அசுஹாபி மார்களில் அறிவைப் பொருந்தப் பெற்ற விருத்தாப்பியப் பருவத்தை யுடைய ஓ ரசுஹாபி யானவர் அந்தப் பூமியின் கண் பிரகாசத்தை வீசுகின்ற மரகதத்தைப் போலும் பசிய இலைக ளானவை ஒளிரா நிற்கும் ஓ ரீத்தங் கன்றைக் களங்க மின்றிச் சிறக்கும் வண்ணம் நட்டினார்.