பக்கம் எண் :

சீறாப்புராணம்

1093


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவன் அவ்விதங் கூறிய வார்த்தைகளை அரசர்களாகிய அவர்கள் கேள்வி யுற்று விரைவி லெழும்பிக் காய்கள் நிறையப் பெற்ற அந்த ஈத்தங் கொல்லை முழுவதையுஞ் சுற்றி நல்லதென்று சொல்லித் தங்களின் தலைகளை நிமிர்த்தி நீ இந்தக் காட்டினிடத்து மேலான நல்ல ஈத்தஞ் சோலையை எங்கள் கைக்குத் தந்தாய், யாங்கள் விரும்பிய தங்கத்தையும் விரைவில் தருவாயாக வென்று பதிற் கேட்டார்கள்.

 

2944. பொன்ன ளித்திடென் றுரைதரத் துகிலிடை பொதிந்த

     மின்னு மாடகக் கட்டியைத் தெரிதர விரைவிற்

     சொன்ன சொல்லெடை மாட்டிய துலையினிற் றூக்க

     நன்ன யம்பெற விடைக்கிடை நறுக்கிவைத் தனனால்.

53

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு தங்கத்தைத் தருவாயாக வென்று கேட்க, அவன் வத்திரத்தி னிடத்துப் பொதியப் பெற்ற பிரகாசியா நிற்கும் அந்தத் தங்கக் கட்டியை யாவரு மறியும் வண்ணம் ஆதியிற் கூறிய சொல்லினது நிறையில் கட்டிய நிறை கோலில் நிறுப்பதற்கு நல்ல மேன்மையானது பொருந்தும்படி நிறைக்கு நிறை வேகத்தில் கண்டித்து வைத்தான்.

 

2945. எத்த லத்தினு நிறையென வியற்றும்வி ராகன்

     பத்தி ரண்டுநூற் றைம்பதென் றிடுமெடைப் படியே

     தத்த ரத்தினிற் பலபட நறுக்கியுஞ் சரியா

     வைத்தது மாடகக் கட்டிமுன் போல்வளர்ந் திருந்த

54

      (இ-ள்) அன்றியும், எந்தத் தானத்திலும் நிறை யென்று விதித்த ஆயிரத் திரு நூற்றி யைம்ப தென்று கூறும் விராகனது நிறைப் பிரகாரம் விரைவில் பல துண்டாகக் கண்டித்து சம னாக வைத்தும் அந்தத் தங்கக் கட்டி யானது ஆதியி லிருந்ததைப் போலும் வளர்தலுற்றிருந்தது.

 

2946. தனந்த னிற்குறை யாதளித் தனைபொழி றனையுங்

     கனிந்த தீங்கனி யொடுமளித் தனையினிக் கடிதுன்

     மனந்த னிற்றுணிந் திடுமிசு லாநெறி மார்க்கத்

     தினந்த னிற்செலென் றிசைத்தலும் விரைவுட னெழுந்தார்.

55

      (இ-ள்) அவ்வித மிருக்க, அவர்கள் நீ தங்கத்திலும் குறையாமல் தந்தாய், பழுத்த இனிமையான பழங்களோடு ஈத்த மரச் சோலையையுந் தந்தாய், இனி விரைவில் உனது சிந்தையின் கண் நிச்சயித்த தீனுல் இஸ்லா மென்னு சமயத்தினது சன்மார்க்கத்தை யுடைய கூட்டத்திற் போய்ச் சேருவாயாக வென்று சொல்லிய மாத்திரத்தில் அவர் வேகத்தோடு மெழும்பினார்.