பக்கம் எண் :

சீறாப்புராணம்

1115


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு வளைய, ஆகாயத்தின்கண் ணுள்ள கொடிய சூரியனின் கிரணங்களானவை தூசியினால் புகுதற்கு இடமில்லை யெனப் பொருந்தா நிற்கும் அரசர்களாகிய அசுஹாபி மார்களின் கூட்டங்களையும் குதிரைகளையும் சூழ்ந்த மற்ற சேனைகளையும் மகுசியென்பவன் பார்த்துத் தனது இதயத்தின்கண் மலைப்புற்றான்.

 

3018. வருவதும் நிகழ்வதும் வகுத்துப் புந்தியிற்

     பெருகிய தலைவருக் கெடுத்துப் பேசிநல்

     லுரையினும் வழக்கினு மொத்த சூழ்ச்சியின்

     புரவல னொருவனைத் தூது போக்கினான்.

25

      (இ-ள்) அவ்வாறு மலைப்புற்று வருவதையும் நிகழ்வதையும் பிரித்து அறிவினா லோங்கப்பட்ட தலைமைத் தனத்தை யுடையவர்களுக்கு எடுத்துக் கூறி நல்ல வார்த்தையினாலும் வழக்கினாலும் பொருந்திய ஆலோசனையை யுடைய ஓரரசனைத் தூதாக அனுப்பி வைத்தான்.

 

3019. சந்தென விடவருந் தலைமை மன்னவன்

     வந்துநந் நபிபதம் வழுத்தி யூன்றிய

     கந்தடு கடகளி றனைய காட்சியான்

     சிந்தைகண் மகிழ்தர வெடுத்துச் செப்புவான்.

26

      (இ-ள்) அவ்வாறு தூ தென்று அனுப்ப வரும் தலைமைத் தனத்தையுடைய அரசனான பூமியின்கண் நாட்டிய கட்டுத் தறியைப் பொருதாநிற்கும் மதத்தைக் கொண்ட யானையை நிகர்த்த தோற்றத்தை யுடையவன் வந்து நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் திருவடிகளைத் துதித்துத் தனது மனமும் நயனங்களும் மகிழ்ச்சி யடையும்படி எடுத்துக் கூறுவான்.

 

3020. இறையவன் றிருநபி யுலகுக் கின்புறு

     மறைவழி யொழுகியவ் வணக்க வாசக

     முறைமையி னடத்தியா முழுது மிவ்வயி

     னுறைகுவ தலதுவே றுறுதி வேண்டுமோ.

27

      (இ-ள்) யாவற்றிற்கு மிறைவ னான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய நபியே! யாங்க ளனைவரும் இப்பூமியின் கண்ணுள்ள மாந்தர்கட்கு இன்பத்தைப் பொருந்திய புறுக்கானுல் அலீ மென்னும் வேத மார்க்கத்தில் நடந்து அந்த தொழுகையினது வாசகத்தை ஒழுங்கோடும் நகர்த்தி இவ்விடத்தில் தங்குவதல்லாமல் வேறு நிண்ணயம் வேண்டுமா? வேண்டாம்.