பக்கம் எண் :

சீறாப்புராணம்

1117


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வா றெழ, காரணீகத்தை யுடைய வர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சூரிய வெப்பத்தை ஓட்டிய செழிய மேகக் குடையி னிடத்துப் பொருந்தும் வண்ணம் நீட்டிய வெண்ணிறத்தைக் கொண்ட வத்திரத்தினாலான துவஜங்கள் ஒளிவைப் பிரகாசிக்கவும், கூர்மைப் படுத்திய யுத்தாயுதங்கள் நெருங்கவும், போய் ஓர் காட்டின்கண் ணிறங்கினார்கள்.

 

3025. இறங்கிய பாசறை யிருந்து வாரிபோற்

     கறங்கிய சேனைமு காசி ரீன்களின்

     மறங்கிள ரெண்பது பெயரை வாளொடு

     நிறங்கிள ரயிலொடு நீக்கி னாரரோ.

32

      (இ-ள்) அவ்விதமிறக்கிய உறை விடத்தின் கண் தங்கிச் சமுத்திரத்தைப் போலுஞ் சத்தியாநிற்கும் சேனையாகிய முகாஜிரீன்களில் வலிமையானது ஓங்கப் பெற்ற எண்பது பேர்களை ஒளிவு பிரகாசிக்கின்ற வாளுடனும் வேலுடனும் பிரித்தார்கள்.

 

3026. கந்தமுங கதிரும றாத காட்சியர்

     கொந்தலர்ப் புயத்துபை தாவைக் கூவிநற்

     சிந்தையின் மகிழ்வுற விருத்தித் தேறிய

     மந்திர மொழிசில வகுத்துப் பின்னரும்.

33

      (இ-ள்) அவ்வாறு பிரித்துக் கத்தூரி வாசனையும் பிரகாசமும் ஒழியாத தோற்றத்தை யுடையவர்களான நமது நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பூங்கொத்துக்களினா லாகிய மாலையை யணிந்த தோள்களையுடைய உபைதா றலி யல்லாகு அன்கு அவர்களை யழைத்து அவர்களின் நன்மை பொருந்திய மனத்தின் கண் களிப்படையும் வண்ணமிருக்கச் செய்து தெளிந்த சில வேத வசனங்களைக் கூறிப் பின்னரும்,

 

3027. கூடுமெண் பதுபெய ருடனுங் கோதற

     நாடிநீர் மக்கமா நகரைச் சூழ்தரு

     பாடிக ளனைத்தும்பாழ் படுத்துஞ் சூறைக

     ளாடியிங் கடைகென வறைந்திட் டாரரா.

34

      (இ-ள்) நீவிர் கூடிய இந்த எண்பது முகாஜிரீன்க ளோடும் களங்கமற விரும்பிச் சென்று திரு மக்கமா நகரத்தைச் சூழ்ந்த சிற்றூர்க ளெல்லாவற்றையும் நாசப்படுத்துகின்ற கொள்ளைகள் செய்து இங்கு வந்து சேருங்க ளென்று கற்பித்தார்கள்.