பக்கம் எண் :

சீறாப்புராணம்

1118


இரண்டாம் பாகம்
 

3028. கரியினு மதர்த்தமு காசி ரீன்களை

     மருமலர்ப் புயத்துபை தாவை மன்னபி

     திருநய னங்களா னோக்கிச் சிந்தைவைத்

     திருளறும் வெற்றிவெண் கொடியு மீந்தனர்.

35

      (இ-ள்) அன்றியும் நபிகட் பெருமானாரான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் யானைகளைப் பார்க்கிலும் மதர்ப் புற்ற முகாஜிரீன்களையும், வாசனையைக் கொண்ட புஷ்பங்களினாலான மாலையை யணிந்த தோள்களை யுடைய உபைதா றலி யல்லாகு அன்கு அவர்களையும், தங்களின் தெய்வீகந் தங்கிய நேத்திரங்களினாற் பார்த்து மனம் வைத்து அந்தகாரம் மறா நிற்கும் வெள்ளிய வத்திரத்தினாலான வெற்றிக் கொடியையுங் கொடுத்தார்கள்.

 

3029. கருதல ருறைபதி களைந்திட் டொல்லையின்

     வருகென வினைஞரை விடுத்து வள்ளல்பாய்

     துரகதக் குழுவொடுஞ் சேனை சூழ்தர

     நரலையின் வளமதீ னாவை நண்ணினார்.

36

      (இ-ள்) வள்ளன்மையை யுடையவர்களான நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் அவ்வாறு கொடுத்துச் சத்துராதிக ளாகிய காபிர்கள் தங்கிய அந்தச் சிற்றூர்களைக் கொள்ளையாடி யொழித்து விரைவில் வருகுவீர்களாக வென்று வினைஞர்களான அந்த முகாஜிரீன்களை அனுப்பித் தாவிச் சாடா நிற்கும் குதிரைக் கூட்டங்களுடன் மற்ற படை வீரர்கள் சூழும் வண்ணம் சமுத்திரத்தைப் போன்ற செல்வத்தையுடைய திருமதீனமா நகரத்தை வந்து சேர்ந்தார்கள்.

 

3030. எண்ணொரு பதின்மரு மிலங்கு நீடொடை

     வண்ணவொன் புயத்துபை தாவு மாறிலா

     தண்ணறன் பதமலர் போற்றி யன்பொடும்

     விண்ணெடுங் கடுவிசைப் புரவிமேற் கொண்டார்.

37

      (இ-ள்) அந்த எண்பது முகாஜிரீன்களும் பிரகாசித்து நீண்ட பூமாலையை யணிந்த பருத்த ஒள்ளிய தோள்களை யுடைய உபைதா றலியல்லாகு அன்கு அவர்களும் மாறாது எப்பொருள்கட்கு மிறைவரான நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் பாதங்களாகிய தாமரைப் புஷ்பங்களைக் கிருபையோடுந் துதித்து ஆகாயத்தில் நீண்ட கொடிய வேகத்தைக் கொண்ட குதிரையின் மேலேறினார்கள்.