இரண்டாம் பாகம்
3031.
எதிரமர் தொறுந்தழும்
பிருந்த மெய்யினர்
கதிரயில் வாண்மற வாத கையினர்
விதியவன் மறைமுறை
விளக்கும் வாயினர்
புதியவெம் பகைப்பதி யடுப்பப்
போயினார்.
38
(இ-ள்) அவ்வா றேறி எதிர்த்த
யுத்தங்கள் தோறும் தழும்பான திருக்கப் பெற்ற சரீரத்தை யுடையவர்களும், பிரகாசத்தைக் கொண்ட
வேலையும் வாளையும் மறவாத கையை யுடையவர்களும், விதியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின்
புறுக்கானுல் மஜீதென்னும் வேகத்தினது ஒழுங்குகளை விளக்கிக் காட்டா நிற்கும் வாயை யுடையவர்களு
மாகிய அந்த முகாஜிரீன்கள் நூதனமான வெவ்விய பகையையுடைய அந்த நகரங்களைச் சமீபிக்கப்
போனார்கள்.
3032.
வெற்றிவெண் கொடியொடும் வேக
வாம்பரிக்
கொற்றவர் குழுமிவந் தடருங்
கொள்கையைப்
பற்றல ரறிந்துசீ றூரிற் பல்பல
தெற்றறக் குடியொடுஞ் சிதறிப்
போயினார்.
39
(இ-ள்) வேகத்தைக் கொண்ட
தாவிச் சாடா நிற்கும் குதிரைகளை யுடைய அரசர்களான அந்த முகாஜிரீன்கள் வெள்ளிய வத்திரத்தினா
லாகிய வெற்றிக் கொடியோடும் அவ்வாறு கூட்டமுற்று வந்து அடர்ந்த செய்கையைச் சத்துராதிகளான
அக் காபிர்கள் தெரிந்து அந்தச் சிறிய பாடிகளில் பற்பல அடைப்புகளும் அறும் வண்ணம் தங்களின்
கூட்டத்தோடும் சிதறுத லுற்றுப் போனார்கள்.
3033.
இவுளியும் படையுமு காசி ரீன்களுந்
தவிசுறை யரசுபை தாவும் வந்தவை
யபுசகல் மகனறிந் தரிய வேகத்தாற்
குவிதரும் படைக்கெதிர் கொண்டு
நேர்ந்தனன்.
40
(இ-ள்) அபூஜகி லென்பவனின்
புத்திரனான இக்கிரிமா என்பவன் குதிரைகளையும் ஆயுதங்களையு முடைய முகாஜிரீன்களும் சிங்காசனத்தின்
கண் தங்கா நிற்கும் இராச ராகிய உபைதா றலியல்லாகு அன்கு அவர்களும் அவ்வாறு வந்த வரலாற்றைத்
தெரிந்து அரிய கோபத்தினால் குவிந்த அந்தச் சேனைகளுக்கு முற்கொண்டு வந்து எதிர்த்தான்.
3034.
மதிவர வழைத்தவர் விடுத்த
மன்னருஞ்
சதியபு சகல்தரு புதல்வன்
றானையுங்
கதிபரி யொடுபடைக் கலத்தின்
கையொடு
மெதிருமக் கெமக்கென
விருக்குங் காலையில்.
41
|