பக்கம் எண் :

சீறாப்புராணம்

1121


இரண்டாம் பாகம்
 

தெய்தவராகிய அந்தச் சகுது றலி யல்லாகு அன்கு அவர்களிருந்த வேகத்தையும் வாளாயுதத்தைத் தாங்கியவர்களான மற்ற முகாஜிரீன்களினது சிந்தனையையு முணர்ந்து தான் செய்யும் படி எதிர்த்து வந்த யுத்தத் தொழிலை விலக்கித் தனது சேனையைப் பின்வாங்கச் செய்தான்.

 

3038. வெட்டுக்குத் தெனுமொழி விளம்பி லாதொரு

     மட்டினின் றவர்கள்பின் வாங்கி னாரினித்

     தொட்டமர் விளைத்திடல் சூழ்ச்சித் தன்றெனத்

     தட்டல கயிலுபை தாவு நீங்கினார்.

45

      (இ-ள்) அவன் அவ்வாறு செய்ய, பரிசையையும் வேலையும் மற்ற ஆயுதங்களையு முடைய உபைதா றலி யல்லாகு அன்கு அவர்களும் வெட்டு, குத்து என்று கூறா நிற்கும் வார்த்தைகளைக் கூறாது ஓரெல்லையில் நின்றவர்கள் பின் வாங்கினார்கள். இனி நாம் ஆயுதங்களைத் தீண்டி யுத்தஞ் செய்வது உபாயமல்ல வென்று அவ்விடத்தை விட்டு மகன்றார்கள்.

 

3039. மருவல ருடனிருந் திருவர் வந்ததும்

     பொருசகு துக்கெதி ராது போயதும்

     விருதுகொண் டிகலிடும் வெற்றிப் போரினும்

     பெரிதெனக் குழுவொடும் பிரியத் தேகினார்.

46

      (இ-ள்) அவ்வா றகன்று இருவர்கள் சத்துராதிக ளாகிய காபிர்களோ டிருந்து தங்களோடு வந்து சேர்ந்ததையும், பொருதிய சகுது றலி யல்லாகு அன்கு அவர்களுக்கு எதிராமல் அவர்கள் சென்றதையும், கொடியைக் கொண்டு பொருதா நிற்கும் விஜயத்தைக் கொண்ட யுத்தத்தைப் பார்க்கிலும் பெரியதென்று சொல்லித் தங்களின் கூட்டத்தோடும் பிரியத்துடன் சென்றார்கள்.

 

3040. மிகல்பெறும் வெற்றியின் பீச பீலுக்கா

     யிகன்முதற் சரமுமொன் றெய்து மன்னவர்

     முகிறவழ் கொடிசெலத் தானை மொய்த்திட

     நகர்புகுந் தகுமது பதத்தை நண்ணினார்.

47

      (இ-ள்) அன்றியும், மிகுத்தலைப் பெறா நிற்கும் வெற்றியை யுடைய பீசபீலுக்காய் அரசர்களான அந்த முகாஜிரீன்கள் ஆதியில் வலிமையைக் கொண்ட ஓ ரம்பையு மெய்து மேகத்தி னிடத்துத் தவழா நிற்கும் துவஜமானது முன்னாற் செல்லவும், சேனையானது நெருங்கவும், திரு மதீனமா நகரத்தில் வந்து சேர்ந்து அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் திருவடிகளில் வந்து சேர்ந்தார்கள்.