பக்கம் எண் :

சீறாப்புராணம்

1193


இரண்டாம் பாகம்
 

உதயமாகிய சமயத்தில், பூமியைப் பார்க்கிலும் பெரிய பொறுமையை யுடைய அந்தக் காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் தெய்வீகந் தங்கிய அழகானது பொருந்தப் பெற்ற புதிய விவாகத்தினது கோலத்தைப் பெற்ற வாயிலின் கண்.

 

3236. தடியுலர்ந் துடனரம் பெழுந்து தாங்கிலா

     மிடியினன் பசியடைத் திருக்கு மெய்யினன்

     பிடிவிர லுருவிலாப் பீற லாடையன்

     கொடுகிய குளிரின்வந் தொருவன் கூயினான்.

196

      (இ-ள்) ஊனானது காய்ந்து சரீரத்தின் நரம்புகள் எழப் பெற்றுத் தாங்கக் கூடாத வறுமையை யுடையவனும், பசியை அடைத்திருக்குஞ் சரீரத்தை யுடையவனும், பற்றுகின்ற விரல்களுரு வில்லாமல் பீற்றலைக் கொண்ட வத்திரத்தை யுடையவனு மாகிய ஒருவன் கொடுகிய குளிரினால் வந்து கூவினான்.

 

3237. கூயவ னியாவனென் றெழுந்து கோதையர்

     நாயகி யெதிர்ந்துபக் கீறை நன்குறச்

     சாயிபு பதமலர் வருந்தத் தக்கவென்

     வாயிலின் வந்ததென் மவுலு வீரென்றார்.

197

      (இ-ள்) அவ்வாறு கூவினவன் யாவன்? என்று பெண்களுக்கு நாயகியாரான அந்தக் காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் எழும்பி அந்தப் பக்கீறை யெதிர்ந்து சாயிபு! தங்களின் பாதமாகிய தாமரைப் புஷ்பங்கள் துன்புறத்தக்க எனது வாயிலின் கண் நன்மை பொருந்தும் வண்ணம் தாங்கள் வந்த காரணம் யாது? அஃதைச் சொல்லுங்க ளென்று கேட்டார்கள்.

 

3238. கடிமனை யிஃதெனக் கருதி வந்தனன்

     வடிவுறு மயிலனீர் வயிற்று றும்பசிக்

     கொடுமையுந் தவிர்த்துடற் குளிரு நீங்கவோர்

     பிடவையு மருள்கவென் றெடுத்துப் பேசினான்.

198

      (இ-ள்) அவ்வாறு கேட்க, அவன் அழகைப் பொருந்தப் பெற்ற மயில் போலுஞ் சாயலை யுடைய பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹாவே! யான் இஃது கலியாண வீடென்று சிந்தித்து இங்கு வந்தேன். எனது வயிற்றி னிடத்துத் தாங்கிய பசியினது கொடுமையையுந் தவிர்த்து எனது சரீரத்தின் குளிரும் நீங்கும் வண்ணம் ஒரு வத்திரமுங் கொடுங்க ளென்று எடுத்துச் சொன்னான்.