பக்கம் எண் :

சீறாப்புராணம்

1194


இரண்டாம் பாகம்
 

3239. வறியவ னுரைத்தசொற் கேட்டு மாமயி

     லறுசுவைக் கறியுட னன்ன மீந்துமேற்

     குறையற வியற்றிய புதுக்குப் பாயமும்

     பெறுகவென் றளித்தன ரறிவின் பெற்றியால்.

199

      (இ-ள்) தாரித்திரத்தை யுடைய அவன் அவ்வாறு சொன்ன வார்த்தைகளைப் பெருமை பொருந்திய மயில் போலுஞ் சாயலையுடைய அந்தப் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் கேள்வியுற்று அறிவின் தன்மையினால் ஆறுவித உருசியைக் கொண்ட கறிகளுடன் அன்னமுங் கொடுத்துத் தங்களின் மீது களங்க மறும் வண்ணந் தரித்த புதிய குப்பாயத்தையும் நீவிர் பெறுவீராக வென்று கொடுத்தார்கள்.

 

3240. இகலறு மனத்தவ ரீந்த போசன

     மகமகிழ் தரவயி றார வுண்டுநற்

     றுகிலையு மொல்லையிற் புனைந்து தோமறும்

     புகழொடும் வாழ்த்திபக் கீறு போயினான்.

200

      (இ-ள்) பக்கீ றாகிய அவன் பகைமை யற்ற மனத்தையுடையவர்களான அந்தப் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் அவ்வாறு கொடுத்த ஆகாரத்தை மனமானது மகிழ்ச்சியைத் தரும் வண்ணம் வயிறு நிறையப் புசித்து நன்மை பொருந்திய அவ்வத்திரத்தையும் அணிந்து குற்றமற்ற கீர்த்தியோடும் அவர்களைத் துதித்து விரைவிற் சென்றான்.

 

3241. ஆதுல னகன்றபி னாதி தூதெனு

     மாதவ முகம்மது மருவ லார்தமைக்

     காதபூ பக்கரு முமறுங் கல்வியி

     னேதமில் குணத்துது மானு மியார்களும்.

201

      (இ-ள்) தாரித்திரத்தை யுடையவ னாகிய அவன் அவ்வாறு சென்ற பிற்பாடு யாவற்றிற்கும் முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூ லென்று சொல்லும் மகா தவத்தை யுடைய நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும், சத்துராதிகளைக் கொல்லுகின்ற அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களும், உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களும், அறிவினது குற்றமற்ற குணத்தையுடைய உதுமா னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு அவர்களும், யார்களான அசுஹாபிமார்களும்.

 

3242. இனையன பெயரும்வந் தெய்த நன்மலர்

     புனைதரும் பாத்திமா வென்னும் பூங்கொடி

     தனியெதி ரெழுந்துச லாமென் றோதினா

     ரனைவரு மறுமொழி கொடுத்தன் புற்றனர்.

202