பக்கம் எண் :

சீறாப்புராணம்

1199


இரண்டாம் பாகம்
 

3255. பரவர சரியலி மனைக்கும் பாத்திமா

    திருமண மனைக்கும்பா வாடை செய்தென

   வரகதிச் சபுறயீ லென்னும் வள்ளறம்

    விரிகதிர்ச் சிறையினை விரித்து நின்றனர்.

215

      (இ-ள்) அவ்விதம் வந்த வரத்தினது பதவியைக் கொண்ட அந்த ஜிபுரீ லலைகிஸ்ஸலா மென்று சொல்லும் வள்ளலானவர்கள் அன்னிய அரசர்களாகிய யானைகளுக்குச் சிங்கத்தை நிகர்த்த அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் வீட்டிற்கும், பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் தெய்வீகந் தங்கிய விவாகத்தைப் பொருந்திய வீட்டிற்கும், பாவாடை செய்ததைப் போன்று விரிந்த பிரகாசத்தைக் கொண்ட தங்களின் சிறகை விரித்து நின்றார்கள்.

 

3256. மன்னவ ரியாவரு மருங்கு சூழ்வரக்

    கன்னியுந் தொடும்பதக் கபுசு தன்னொடு

    மின்னிய சிறையெனு மாடை மீதினி

    னன்னலங் கனிதர நடந்து போயினார்.

216

      (இ-ள்) அவ்வாறு நிற்க, அரசர்களான அவர்களனைவரும் பக்கத்தில் வளைந்து வரும் வண்ணம் கன்னி யாகிய அந்தக் காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களும் தாங்கள் தரித்த பாத கபு சோடும் ஒளிரா நிற்குஞ் சிறகென்று சொல்லும் வத்திரத்தின் மீது நல்ல நலமானது கனியும்படி நடந்து சென்றார்கள்.

 

3257. மறைநபி மகடமை யலிதம் வாயிலிற்

    சிறையினி னடத்துதல் செய்து வானவர்க்

    கிறைககன் புகுந்தன ரியாரு மின்புறப்

    பொறையெனு மனைவயின் பொலிய வைகினார்.

217

      (இ-ள்) தேவர்களான மலாயிக்கத்து மார்களின் அதிபதி யாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் புறுக்கானுல் கரீ மென்னும் வேதத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் புதல்வியா ரான அந்தக் காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் வீட்டின் வாயில் வரை தங்களின் சிறகின் மீது நடத்துவித்து வானலோகத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு கூடிய அனைவரும் இனிமை யானது பொருந்தும் வண்ணம் மலையென்று சொல்லா நிற்கும் அந்த வீட்டினிடத்துப் பொலியும் படி தங்கியிருந்தார்கள்.