பக்கம் எண் :

சீறாப்புராணம்

1221


இரண்டாம் பாகம்
 

புதல்வ ரான அவ் வப்துல்லா றலி யல்லாகு அன்கு அவர்களை அவ்வாறு அந்தப் பத்னுன் னகுலா வென்னுந் தானத்திற்கு அனுப்பி விட்டு ஓங்கிய மலைகளைச் சமுத்திரத்தி னிடத்துச் சிதறும்படி தள்ளிக் கையினிடத்துக் கொண்ட பந்தைப் போலும் வருகின்ற வலிமையை யுடைய தங்களின் குதிரையின் மீதேறினார்கள்.

 

3322. திறல்வய வீரருஞ் சேனை மன்னரு

     மறையொலி திசைதர வருமவ் வேளையி

     லறபியி லொருவன்வந் தடுத்தி யாவர்க்கு

     மிறையவன் றூதர்மு னியம்பு வானரோ.

27

      (இ-ள்) அவ்வாறு ஏறி வலிமையைக் கொண்ட வெற்றியையுடைய வீரர்களும் படைத் தலைவர்களும் புறுக்கானுல் அலீ மென்னும் வேத வசனத்தினது ஓசை யானது எண்டிசைகளிலும் முழங்கும் வண்ணம் சூழ்ந்து வருகின்ற அந்தச் சமயத்தில், யாவருக்குங் கடவுளான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சந்நிதானத்தின் கண் அறபியி லுள்ள ஓர் மனிதன் வந்து நெருங்கிச் சொல்லுவான்.

 

3323. முன்னவர் மும்முறை மொழியி னீறினி

     னன்னபி யொருவருண் டென்னு நாட்டத்தாற்

     சென்னிலந் தொறுந்தொறுந் திரிந்துங் காண்கிலா

     திந்நிலத் தெதிர்ந்தன னூழி னேவலால்.

28

      (இ-ள்) முன் னுள்ள நபிமார்களின் தௌறாத்து, சபூர், இஞ்சீலென்னும் மூன்று வேதங்களினது வசனங்களி னாலு முடிவில் நன்மை பொருந்திய நபி யானவர் ஒருவருள ரென்று சொல்லிய ஓராசையினால் யான் செல்லுகின்ற தேசங்க ளெல்லாவற்றிலுஞ் சென்று அலைந்து தேடியுங் காணாமல் எனது ஊழினது ஏவலினால் இந்தத் தானத்தின் கண் வந்து தங்களைச் சந்தித்தேன்.

 

3324. மண்டலம் புகழ்தரு முகம்ம தேநிழற்

     கொண்டலங் கவிகையுங் குறிப்புங் காட்சியுங்

     கண்டவன் பொருட்டுயர் கார ணீகமொன்

     றுண்டெனி லெனக்குவே றுறுதி யில்லையால்.

29

      (இ-ள்) இப் பூலோகமானது துதிக்கா நிற்கும் முகம்ம தென்னுந் திருநாமத்தை யுடைய நபிகட் பெருமானே! நிழலைச் செய்கின்ற அழகிய மேகக் குடையையும் மற்ற அடையாளங்களையும், அவற்றின் தோற்றங்களையும் பார்த்தவனான என் னிமித்தம் மேன்மை தங்கிய யாதேனும் ஓர் காரணீகமுள்ளதேல் எனக்கு வேறோ ருண்மையும் வேண்டாம்.