பக்கம் எண் :

சீறாப்புராணம்

1231


இரண்டாம் பாகம்
 

மாதத்தினது வேறு பாட்டால் அவர்கள் கொண்டு வந்த திரவியத்தைச் சில தினமாக வைத்திருந்தார்கள். பின்னர் குற்ற மற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணிய மானது அதிகரிக்கும் வண்ணம் ஓராயத்து இறங்கினதினால் பிரியமுற்று அவர்க ளியாவருக்கும் அப் பொன்னைப் பாகித்து இனிமையோடுங் கொடுத்தார்கள்.

 

3351. பிடித்தருஞ் சிறையிற் பட்ட பெயர்தலை விலைய தாகக்

     கொடுத்தரும் பொன்னான் மக்கா புரத்தவர் கொண்டு போனார்

     வடித்தசொன் மறையோர் வாழ்த்த மன்னவ ரினிது போற்றத்

     தொடுத்ததீன் விளங்கச் செய்து தூதுவ ரிருந்தா ரன்றே.

15

      (இ-ள்) அன்றியும், திரு மக்கமா நகரத்தை யுடைய காபிர்கள் சண்டையிற் பிடித்து அருமையான சிறையி லாக்கப்பட்ட அவ்விரு தலைவர்களுக்கும் முதன்மையைக் கொண்ட கிரயமாக அரிய பொன்னைக் கொடுத்து அவர்களைத் தங்களிடத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். றசூலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தெளிக்கப் பெற்ற வசனங்களைய யுடைய வேதியர்கள் வாழ்த்தவும், அரசர்கள் இனிமையோடு துதிக்கவும், தங்களால் தொடுக்கப்பட்ட தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை இவ் வுலகத்தின் கண் விளங்கும் வண்ணஞ் செய்து வீற்றிருந்தார்கள்.