பக்கம் எண் :

சீறாப்புராணம்

1315


இரண்டாம் பாகம்
 

3590. வற்றுறா வளமை மக்கமா நகரார்

           வந்தது மெதிர்மலைந் தவணி

     லுற்றது மெழுவ ருடனபூ சகல்த

           னுயிரிழந் ததுவும்வெண் சமரில்

     வெற்றியு மியாவும் வரிப்பட வெழுதி

           விரைவினின் மாருத மியையா

     வொற்றர்கைக் கொடுத்து மதீனமா நகருக்

           கனுப்பின ரெவரினு முயர்ந்தோர்.

239

      (இ-ள்) அவ்வாறிருந்த யாவருக்கும் மேலானவர்களாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் குறையாத செல்வத்தையுடைய திரு மக்கமா நகரத்தினது காபிர்கள் வந்ததையும், அந்தப் பதுறென்னுந் தானத்தில் தங்கி அவர்களது முன்னர்ப் பொருதியதையும், ஒன்று முதலிய எழுவர்களோடு அபூஜகி லென்பவன் தனது பிராணனை யிழந்ததையும், வெவ்விய அந்த யுத்தத்தில் தங்களுக்குக் கிடைத்த வெற்றியையும், மற்ற எல்லாச் சங்கதிகளையும் வரிசையாக எழுதி விரைவில் காற்றும் பொருந்தாத வேகத்தையுடைய தூதரது கையில் கொடுத்துத் திரு மதீனமா நகரத்திற்கு அனுப்பினார்கள்.

 

3591. வடிவுறுஞ் சாயை வெளியுறா நபிதம்

          மக்களில் றுக்கையா வென்னுங்

     கொடியிடை யுதுமான் மனைவிய ரென்னுங்

          குயின்மொழித் திருமயி லிறந்து

     படியினி லடக்கி யாவருந் திரண்டு

          பள்ளி யினிருக்கு மப்போதி

     லுடைபட பதுறிற் பொருதுவென் றெழுது

          மோலையைக் கொடுத்தன ரோட்டர்.

240

      (இ-ள்) அவ்விதம் அனுப்ப, அந்தத் தூதவர் தங்களது உருவமாகிய தேகத்திற் பொருந்திய நிழலானது வெளியில் தோற்றாத நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது மக்களில் றுக்கையா றலியல்லாகு அன்ஹா வென்று சொல்லுங் கொடி போலும் இடையை யுடையவர்களான உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு அவர்களது நாயகியா ரென்னுங் குயில்போன்ற வார்த்தைகளையுடைய அழகிய மயிலானவர்கள் மரித்து யாவர்களுங் கூடி இப்பூமியில் அடக்கிவிட்டுப் பள்ளியிலிருக்கின்ற அந்தச் சமயத்தில், பதுறென்னுந் தானத்திற் சத்துராதிகளாகிய காபிர்கள் உடையும் வண்ணம் போர் புரிந்து ஜெயித்து எழுதிய ஓலையைக் கொண்டு வந்து கொடுத்தார்.