பக்கம் எண் :

சீறாப்புராணம்

1317


இரண்டாம் பாகம்
 

3594. தானைக ளீண்டக் கொடித்திரண் மலிய

          வருநபி தமைமுக நோக்கிக்

     கானகம் விடுத்தோர் காவதத் திடத்திற்

          கடற்கரைப் புறத்த பாசுபியா

     னூனுடல் வதைத்து மாநிதி யனைத்து

          மொல்லையிற் கொள்வமென் றினிதின்

     தீனவ ரொருவ ருரைத்தனர் கேட்டுச்

          சிந்தையிற் பொருந்தின ரன்றே.

243

      (இ-ள்) சைனியங்கள் நெருங்கவும், கொடிக் கூட்டங்கள் பெருகவும், அவ்வாறு எழுந்து வருகின்ற நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது வதனத்தைத் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடைய ஒரு அசுஹாபியானவர் பார்த்து இந்தக் காட்டை விட்டு ஒரு காதவழி தூரமுள்ள இடத்திற் பொருந்திய சமுத்திர தீரத்தினது பக்கத்திலிருக்கின்ற அபாசுபியா னென்பவனது நிணத்தைக் கொண்ட உடலை விரைவில் வதைசெய்து அவனது பெருமை பொருந்திய பொருட்க ளெல்லாவற்றையும் நாம் பெறுவோமென்று இனிமையோடுங் கூறினார்கள். அவ்வார்த்தைகளை அவர்கள் கேள்வியுற்று அதற்கு மனதின்கண் சம்மதித்தார்கள்.

 

3595. எழுந்திவண் வருமு னிரண்டிலொன் றுங்கைக்

          கிறைவசப் படுத்தின னெனுஞ்சொன்

     மொழிந்தனி ரவையே முடிந்தன வினிமேன்

          மூளும்வெஞ் சினத்தினை முற்றி

     யழுந்திடப் பொருத லறிவல வெனஅப்

          பாசெனுந் தந்தையர் மொழியச்

     செழுந்திற னபியு மிஃதுநன் றென்ன

          நிதியின்மேற் சேறலை விடுத்தார்.

244

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சம்மதிக்க, அப்பாசு றலியல்லாகு அன்கு வென்று சொல்லும் அவர்களது சிறிய பிதாவானவர்கள் நாம் எழும்பி இங்கு வருவதற்கு முன்னர்க் கடவுளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் உங்கள் கைக்கு இரண்டிலொரு காரியத்தை வசமாக்கித் தந்தா னென்று கூறும் வார்த்தைகளைக் கூறினீர்கள். அவ்வார்த்தைகளே நிறைவேறின. இனிமேல் நாம் மூளுகின்ற வெவ்விய கோபத்தை முதிரப் பெற்றுச் சத்துராதிகள் வருந்தும் வண்ணம் சண்டை செய்வது புத்தியல்லவென்று சொல்ல, செழிய வல்லமையை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லலாகு அலைகி