பக்கம் எண் :

சீறாப்புராணம்

1327


இரண்டாம் பாகம்
 

எனது பிராணனை நிகர்த்தவர்களுமான இந்தத் திரு மக்கமா நகரத்திற்குத் தலைமையாகிய அரசர்கள் பதுறென்னுந் தானத்தில் மாண்டார்கள்.

 

3615.  பொழிதருஞ் செழுமுகிற் பொருப்பின் சார்பினிற்

     கழுதுக ணடம்பல காண வீணினில்

     வழுவுறு மொருவனுக் கான மன்னவ

     ரெழுவரும் படையுட னிறத்தல் வேண்டுமோ.

8

      (இ-ள்) மழை பெய்கின்ற செழிய மேகங்களையுடைய அந்தப் பதுறென்னும் மலையினது பக்கத்திற் பேய்கள் பலவிதக் கூத்துகளாடும்படிப் பிரயோசனமில்லாமல் குற்றத்தைப் பொருந்திய முகம்மதெனும் ஒருவன், அவனுக்காக அபூஜகில், ஒலீது, உத்துபா, உக்குபா, உமையா, உமாறா, சைபா, என்னும் அரசர்க ளேழுபேரும் தங்களது சைனியங்ளோடு மடியவேண்டுமா? வேண்டாமே.

 

3616.  வயமுறு முதவியி னிறந்த மன்னரோ

     டியல்புற வுயிரினை யீந்தி டாதொளித்

     தயல்புகுந் தனனென வணுகி லாவவப்

     பயனுற வுலகமும் பழிக்கு மேகொலாம்.

9

     (இ-ள்) வலிமை பொருந்திய உதவிக்காக அவ்வாறுமடிந்த அரசர்களான அவர்களோடு எனது பிராணனைத் தகுதியுறும்படி கொடுக்காமல் மறைந்து அன்னிய தேசத்திற் போயிருந்தானென்று பொருந்தாத வீண்பயனானது பொருந்தும்படி இந்த உலகமும் என்னை நிந்திக்கும்.

 

3617. துனிதவிர்த் துதவிசெய் தவர்க டுஞ்சயா

     னனிபல பொருளுட னகர நண்ணிமென்

     பனிமலர்ப் பஞ்சணை படுத்து நாடொறு

     மினியன வுண்டியுண் டிருத்தல் நன்றரோ.

10

      (இ-ள்) அன்றியும், நமது துன்பத்தை யொழித்து உதவி செய்த அவர்கள்மாள, யான் மிகுத்த பலபொருட்களோடு தன்னூரில் வந்து சேர்ந்து குளிர்ச்சி தங்கிய மெல்லிய புஷ்பங்களாற் செய்யப்பட்ட பஞ்சணையிற் படுத்துப் பிரதி தினமும் இனிமையை யுடையனவாகிய உணவுகளை யருந்திக் கொண்டு இருப்பது நல்லதா? இல்லை.

 

3618. வீணினி லவருயி ரிறத்தன் மேயினன்

     பூணரும் பழியெனும் பொறையுந் தாங்கின

     னாணினை வீழ்த்தின னகைக்கு மாயின

     னாணினில் வலியனென் றறைய வேண்டுமோ.

11