பக்கம் எண் :

சீறாப்புராணம்

1329


இரண்டாம் பாகம்
 

3622. இன்னன பலவெடுத் திசைத்த வாசக

     நன்னிலை மக்கமா புரத்தி னண்புறு

     மன்னிய வேந்தர்க ளெவர்க்கு மார்புறுங்

     கொன்னுனை வேலினுங் குளித்து நின்றதே.

15

      (இ-ள்) அவன் எடுத்துக் கூறிய இத்தன்மையவனா பலவாசகங்கள் நல்ல நிலைமையையுடைய திரு மக்கமா நகரத்தில் தங்கிய நட்பைப் பொருந்திய அரசர்களனைவருக்கும் தங்கள் நெஞ்சகத்திலுற்ற கொல்லுகின்ற நுனியையுடைய வேலாயுதத்தைப் பார்க்கினுங் குளியச் செய்து நின்றன.

 

3623. இவர்மொழிக் கின்னண மியைந்தி லோமெனிற்

     புவியினிற் செல்வமும் புகழும் வீரமு

     மவமென யாவரு மகத்தி னுட்கொடு

     குவிதருங் கணத்தொடுங் கூற லுற்றனர்.

16

      (இ-ள்) அவ்வாறு நிற்க, அவர்களனைவரும் இந்த அபாசுபியானென்பவனது வார்த்தைகளுக்கு நாம் இப்பொழுது சம்மதித்திலோ மென்றால், இப்பூலோகத்தின்கண் நமது ஆக்கமும், கீர்த்தியும், வல்லைமயும் வீணென்று மனதின்கண் கொண்டு நெருங்கிய தங்கள் கூட்டத்தோடுஞ் சொல்லத் தொடங்கினார்கள்.

 

3624. அருந்திற லபூசகு லுடனம் மாண்மையும்

     பொருந்திறல் வீரமும் பொன்றிப் போயதென்

     றிருந்தன மின்றுநீ யியம்பு மாற்றத்தான்

     விரிந்தநங் குலத்தவர் வெற்றி வீரமே.

17

      (இ-ள்) நாங்கள் அரிய வல்லமையையுடைய அபூஜகி லென்பவனோடு நமது ஆண்மையும் பொருதுகின்ற வலிமையினது வீரமும் அழிந்து போயிற்றென்று எண்ணியிருந்தோம். இன்றையத் தினம் நீ கூறிய சமாச்சாரத்தினால் நமது கூட்டத்தார்களது விஜயமும் வீரமும் எவ்விடத்தும் பரவின.

 

3625.  இன்றுநீ துணிந்தனை யிறந்த மன்னவர்

     வன்றிறற் பழியினை வாங்கி னோமினி

     நன்றியும் விளைத்தனம் நமக்கு நாடொறும்

     வென்றியுண் டென்பது விளம்ப வேண்டுமோ.

18

      (இ-ள்) அன்றியும், நீ இன்றையத் தினம் முயன்றாய், அதனால் மாண்ட அரசர்களது கொடிய வலிமையைக் கொண்ட பழியை நாம் வாங்குவோம், இனி நன்மையுஞ் செய்வோம். ஆதலால் நம்மவர்களுக்குப் பிரதி தினமும் விஜயமுண்டென்று கூறுவதுஞ் சொல்ல வேண்டுமா? வேண்டாம்.