பக்கம் எண் :

சீறாப்புராணம்

1330


இரண்டாம் பாகம்
 

3626. செழுந்திறற் சேனையுஞ் சேனை வீரரும்

     வழிந்திடுங் குருதிவேன் மன்னர் தம்மொடு

     மொழிந்திடு முறைவழி முன்னி யிற்றையி

     னெழுந்திட வேண்டுமென் றிசைத்திட்டாரரோ.

19

      (இ-ள்) ஆதலால் செழிய வல்லமையையுடைய சைனியங்களும் அச்சைனிய வீரர்களும் இரத்தஞ் சிந்துகின்ற வேலாயுதத்தையுடைய அரசர்களோடு நீ கூறிய முறைப்பிரகாரம் இன்றையத் தினமே நெருங்கி எழும்ப வேண்டுமென்று சொன்னார்கள்.

 

3627.  நள்ளுற நகரவர் நவிலும் பெற்றியின்

     வள்ளுரத் தபாசுபி யானு மாசிலா

     வள்ளிலை வேலெடுத் தாடன் மாவொடும்

     புள்ளெழ விரைவினிற் புறப்பட் டானரோ.

20

      (இ-ள்) நட்பைப் பொருந்திய அந்தத் திரு மக்கமா நகரத்தினது காபிர்கள் அவ்வாறு கூறிய தன்மையினால் வலிமையினது ஊக்கத்தையுடைய அபாசுபியா னென்பவனும் குற்றமில்லாத மாமிசத்தை அள்ளிக் கொள்ளும் இலைகளையுடைய வேலாயுதத்தைக் கையில் தாங்கி நடனத்தைக் கொண்ட குதிரையோடு மாமிசந் தின்னலாமென்னும் விருப்பத்தினால் பட்சிகள் தன்னுடன் எழுந்து வரும் வண்ணம் வேகத்திற் புறப்பட்டான்.

 

3628. குரகதப் பேரணி குழுமிச் சூழ்தர

     விரிகதி ரெஃகினர் விரைவின் முன்செலச்

     சொரிகணை விற்கதை சுரிகை வாள்சுமந்

     தரசர்கள் சிலர்திரண் டரியி னீண்டினார்.

21

      (இ-ள்) அவன் அவ்வாறு புறப்பட, குதிரைகளின் பெரிய நிரையானது கூட்டமுற்றுச் சூழவும், விரிந்த பிரகாசத்தைக் கொண்ட வேலையுடையவர்கள் வேகத்தில் முன்னாற் செல்லவும், அம்புகளைப் பொழிகின்ற விற்களையும் தண்டங்களையும் வாட்களையுந் தாங்கிக் கொண்டு சில மன்னர்கள் கூடிச் சிங்கத்தைப் போலும் வந்து நெருங்கினார்கள்.

 

3629. அடற்பரி யிரண்டுநூற் றரசர் தம்மொடும்

     படைக்கலன் வீரரும் பரந்து முன்செலக்

     கொடிப்படைக் குழுவொடுங் குடைகண் மொய்த்திடக்

     கடற்படு பல்லியங் கறங்கப் போயினான்.

22

      (இ-ள்) அவ்வாறு வந்து நெருங்கிய வலிமையைக் கொண்ட குதிரைகளையுடைய இருநூறு மன்னர்களோடும்