பக்கம் எண் :

சீறாப்புராணம்

1331


இரண்டாம் பாகம்
 

யுத்தாயுதங்களைத் தரித்த வீரர்களும் பரவி முன்னாற்போகவும், கொடிப்படையினது கூட்டத்துடன் குடைகள் நெருங்கவும், சமுத்திரத்தைப் போலும் விளங்கிய பல வாச்சியங்களொலிக்கவும், அவ்வபாசுபியா னென்பவன் போனான்.

 

3630.  கைத்தபுன் மனத்தினன் கறுபு தன்மகன்

       மொய்த்தெழும் பெருந்துகண் முகிலின் விம்மிடப்

       பைத்தல நெளிதரப் படைகொண் டீண்டியே

       யெய்த்திடாத் திறத்தொடும் சவீக்கி னெய்தினான்.

23

      (இ-ள்) அவ்வாறு போன கசப்பைக் கொண்ட சிறுமையான மனதையுடையவனான ஹறுபென்பவனது புதல்வனாகிய அந்த அபாசுபியானென்பவன் தாங்கள் செல்லுவதால் நெருங்கி எழாநிற்குந் தூசிகளானவை மேகத்தைப் போலும் ஆகாயத்திற் போய் இறுகிப் பொலியவும், தனது பணாமுடிக ளாயிரத்தானும் இப்பூமியைத் தாங்கிய ஆதிசேடன் புரளவும், தனது சைனியங்களைக் கொண்டு நெருங்கித் தளராத வலிமையுடன் சவீக்கென்னுந் தானத்திற் போய்ச் சேர்ந்தான்.

 

3631. வயமுறு நபியுறை மதீன மாநகர்க்

     கியல்புறக் காதநான் கென்னு மெல்லையி

     னுயர்சவீக் கெனுந்தலத் துழையின் மாவொடு

     பயமற விறங்கினன் வகுத்துப் பாசறை.

24

      (இ-ள்) அவ்விதம் போய்ச் சேர்ந்த அவன் வெற்றியைப் பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்கிய திரு மதீனமா நகரத்திற்கு நான்கு காதமென்று சொல்லும் தானத்தின் கண்ணுள்ள மேன்மையையுடைய சவீக்கென்று கூறுந் தலத்தினது பக்கத்தில் தகுதியுறப் பாசறைகள் வகுத்துக் குதிரைகளோடும் அச்சமின்றி இறங்கினான்.

 

3632. பரித்திர ணிரைநிரை படுத்திப் பாங்கரின்

     விரித்தொளிர் படங்குகள் விளங்கக் கோட்டிநல்

     லரித்திற லரசருக் கமைதி காட்டியூ

     டிருத்துமங் காடியு மிருத்தி னானரோ.

25

      (இ-ள்) அவ்வாறு இறங்கிக் குதிரைக் கூட்டங்களை வரிசை வரிசையாகச் செறித்துக் கட்டிப் பக்கங்களில் தனது பிரகாசத்தைப் பரப்பி ஒளிரா நிற்கும் கூடாரங்களை விளங்கும்படி வளைத்துப் போட்டு நல்ல சிங்கத்தைப் போன்ற வலிமையையுடைய மன்னர்களுக்கு இருப்பிடங்களையுங் காட்டி நடுவிலிருத்துகின்ற கடைவீதிகளையு மிருக்கச் செய்தான்.