பக்கம் எண் :

சீறாப்புராணம்

1338


இரண்டாம் பாகம்
 

தானத்திலுண்டான யுத்தத்தில் வழிகின்ற கொழுப்பானது நீங்காத வேலாயுதத்தைத் தாங்கிய அரசர்கள் வெவ்விய சேனையாகிய தங்களது கூட்டங்களோடும் கறுக்கறா வென்று சொல்லும் அழகிய தானத்தின்கண் இறங்கினார்கள்.

 

3655. மறைநபி முகம்மது மற்ற யார்களுந்

     தெறுகொலை வீரருஞ் சேனை மாக்களு 

     மறைகட லெனவடுத் தனர்க ளீண்டென

     கறுபுதன் றிருமகன் காதி லோதினார்.

48

      (இ-ள்) அவர்கள் அவ்வாறிறங்க, தூதர்கள் இங்கு வேதத்தையுடைய அந்த நபியாகிய முகம்மதென்பவனும் மற்ற அவனது மந்திரிமார்களும், கொல்லுகின்ற கொலைத் தொழிலையுடைய அவனது வீரர்களும், காலாட்படைகளும் ஒலிக்கா நிற்குஞ் சமுத்திரத்தைப் போலும் வந்து சேர்ந்தார்களென்று கறுபென்பவனது அழகிய புதல்வனான அபாசுபியானது செவிகளிற் சொன்னார்கள்.

 

3656. அள்ளிலை வேலொடு மகும தின்படைப்

     புள்ளெழக் கறுக்கறாப் புலத்தி னுற்றவை

     விள்ளலுங் கறுபுதன் விடலை யாக்கமு

     முள்ளமும் வீரமு மொடுங்கி னானறோ.

49

      (இ-ள்) மாமிசத்தை யள்ளிக் கொள்ளா நிற்கும் இலைகளைக் கொண்ட வேலாயுதத்துடன் அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சேனைகள் மாமிசத்தை உண்ணும் ஆசையினால் பட்சிகளெழும்படிக் கறுக்கறாவென்னுந் தானத்தில் வந்து தங்கிய சமாச்சாரங்களை அவ்வாறு தூதர்கள் சொன்ன மாத்திரத்தில், கறுபென்பவனது புதல்வனான அபாசுபியா னென்பவன் தனது ஆக்கமும், மனமும், வலிமையும் அடங்கப் பெற்றான்.

 

3657. பொங்கிய தானையும் புரவிக் கூட்டமுந்

     தங்கிய பொருளுமத் தலத்தின் விட்டுவிட்

     டங்கவ ரொருவரு மறிகி லாநடுக்

     கங்குலங் காலையிற் கரந்து போயினான்.

50

      (இ-ள்) அவ்வாறு ஒடுங்கப் பெற்ற அவன் பொலிந்த தனது சைனியங்களையும், குதிரைக் கூட்டங்களையும், இருந்த பொருள்களையும், அந்தச் சவீக்கென்னுந் தானத்தில் விட்டுவிட்டு அங்குத் தங்கியிருந்தவர்க ளொருவரும் அறியாதபடி அர்த்தராத்திரியான சமயத்தில் ஒளித்துச் சென்றான்.