பக்கம் எண் :

சீறாப்புராணம்

1340


இரண்டாம் பாகம்

      (இ-ள்) அன்றியும், கருநிறத்தையுடைய கழுகுகளும், காக்கைக் கூட்டங்களும், பருந்துகளும் உரஞ்சும்படி கொடிகளோடும் நடந்து வந்த மாசற்றவர்களான யார்களும் சஹாபாக்களும், பெரிய யுத்தமென்று சொல்லும் ஓர் பெற்றியைக் காணாதவர்களாக அரிய காட்டின் மார்க்கத்தில் வந்த மெலிவானது தணிந்தார்கள்.

 

3662. கட்டுவாம் புரவியும் படைக்க லன்களும்

     வட்டவெண் கவிகையு மிரச வர்க்கமு

     மொட்டகைத் திரள்களு மொளிர்நி சானியும்

     விட்டபல் பண்டமும் விரைவின் வாரினார்.

55

      (இ-ள்) அவ்வாறிருந்த அவர்கள் அந்தச் சத்துராதிகளான காபிர்கள் விடுத்துச் சென்ற வலிமையைக் கொண்ட தாவிப்பாய்கின்ற குதிரைகளும் அவர்களது யுத்தாயுதங்களும், வட்டவடிவையுடைய வெள்ளிய குடைகளும், இரசவர்க்கங்களும், ஒட்டகங்களது கூட்டங்களும், பிரகாசிக்கின்ற நிசானியுமாகிய பல பொருட்களையும் வேகத்தில் கொண்டார்கள்.

 

3663. சிறியரும் பெரியருஞ் சேனை வீரருங்

     குறியொடும் பலபொருள் கொள்ளை கொண்டதிற்

     றறுகிலா கறுபுசேய் தருமத் தாலன்றோ

     வறியவ ரெவர்களும் வலிய ராகினார்.

56

      (இ-ள்) கறுபென்பவனது புதல்வனான அபாசுபியா னென்பவனது புண்ணியத்தாற் சிறியவர்களும் பெரியவர்களும் மற்றப் படைவீரர்களும் குறிப்புடன் அவ்வாறு பல பண்டங்களையுங் கொள்ளையாகக் கொண்டு அதனால் தாரித்திரத்தை யுடையவர்களான அவர்கள் யாவர்களும் தடையில்லாது வலியவரானார்கள்.

 

3664. கொள்ளையின் பலபொரு ளனைத்துங் கைக்கொடு

     கிள்ளையின் றிரளொடுங் கிளரும் வாளயின்

     மள்ளர்கள் சூழ்தர வள்ள னந்நபி

     நள்ளுறை யரியென நகர நண்ணினார்.

57

      (இ-ள்) வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கொண்ட கொள்ளையினது பல பண்டங்களெல்லாவற்றையுங் கைக்கொண்டு குதிரைகளின் கூட்டத்தோடும் ஒளிரா நிற்கும் வாளையும் வேலையுமுடைய படைவீரர்கள் சூழ்ந்து வரும் வண்ணம் நடுவிற்றங்கிய சிங்கத்தைப் போலும் திருமதீனமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.