பக்கம் எண் :

சீறாப்புராணம்

1343


இரண்டாம் பாகம்
 

3670. பூவலர் பொய்கை வேலிப் புறம்படர்ந் திலங்கச் சூழ்ந்த

     காவணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டுக்

     கோவுடன் குடியுங் கூடுங் கூட்டமுங் குலைந்து தத்தஞ்

     சேவக மிழந்து நான்கு திசையினுஞ் சிதறிப் போனார்.

6

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்த புஷ்பங்கள் மலர்ந்த தடாகங்களாகிய வேலிகள் பக்கங்களில் விரிந்து இலங்கும்படி சூழ்ந்த சோலைகளைப் பூண்ட முதுமையான திரு மதீனமாநகரத்தினது அரசராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது வரவை அவ்வூரார் கேள்வியுற்று அவ்வூரரசனோடு அங்கிருந்த குடிஜனங்களும் அங்குக் கூடுகின்ற கூட்டத்தார்களுங் கலைந்து தங்கள் தங்களது வீரங்களையு மொழித்து நான்கு திக்குகளிலுஞ் சிதறிச் சென்றார்கள்.

 

3671. பற்றலர் பதியை நீங்கிப் பஃறிசை படர்ந்தா ரென்ன

     வுற்றவ ருரைப்பத் தீனோ ரொண்புயங் குலுங்க நக்கிக்

     கற்றைவெண் ணிலவு காலுங் கவிகையுங் கொடியு மோங்கக்

     கொற்றவ ருடனு மேகிக் குதிரியி னிடத்தி லானார்.

7

      (இ-ள்) சத்துராதிகளாகிய காபிர்கள் அவ்வாறு தங்கள் ஊரை விட்டு விலகிப் பலதிக்குகளிற் சென்றார்களென்று அங்கு வந்தவர்கள் சொல்ல, தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்கள் கேட்டுத் தங்களது ஒள்ளிய தோள்கள் குலுங்கும் வண்ணஞ் சிரித்து மயிர்த் தொகுதியினாற் செய்யப்பட்ட வெள்ளிய நிலவு பிரகாசியா நிற்கும் சாமரங்களும் கொடிகளும் அதிகரிக்கும்படி வெற்றியையுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடும் போய் அந்தக் குதிரியென்னு மூரினது தானத்திற் சேர்ந்தார்கள்.

 

3672. கூறிய குதிரி வாழ்ந்தோ ரொட்டகங் குதிரை காலி

     யேறுமே ழகங்க ளெல்லா மினத்தொடு மொருங்கு சேர்த்து

     மாறரு மணியும் பொன்னு மாடையு மினிதின் வாரி

     வேறினி யில்லை யென்னக் கவர்ந்தனர் விரைவி னன்றே.

8

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்து மேலே சொல்லிய அந்தக் குதிரியென்னும் ஊரில் வாழ்ந்தவர்களான பனி சுலைமுக்கூட்டத்தார்களது ஒட்டகம், குதிரை, பசு, எருது, ஆடு ஆகிய இவைகளெல்லாவற்றையும், அவைகளது இனங்களோடும் ஒன்று சேர்த்து விற்றற் கருமையான இரத்தினங்களையும், திரவியங்களையும், வஸ்திரங்களையும் இனிமையோடும் இனி