பக்கம் எண் :

சீறாப்புராணம்

1347


இரண்டாம் பாகம்
 

கூட்டத்தார்களை புறுக்கானுல் அலீமென்னும் வேதநெறியால் தீனுல் இஸ்லாமாகிய மெய்ம் மார்க்கத்தி லாகச் செய்து அவ்விடத்தில் ஒரு மாத மிருந்த பிற்பாடு கொழுப்பும் இரத்தக் கறையும் நீங்காத பிரகாசத்தையும் கூர்மையையுமுடைய வேலாயுதத்தைத் தாங்கிய வீரர்களான சஹாபாக்கள் சூழும் வண்ணம் வாசனையைக் கொண்ட புஷ்பங்களையுடைய சோலைகளால் மூடப்பட்ட திரு மதீனமா நகரத்தின்கண் வந்து சேர்ந்தார்கள்.

 

3680. நறாக்கனித் துடவை சூழ்ந்த மக்கமா நகரின் வாழ்வோ

     ரறாக்கதிர் புரிசை சாமி னியாத்திரை யகற்றிப் பின்ன

     ரிறாக்கினிற் றொழில்செய் கின்றா ரென்னுமச் செய்தி யாவு

     மறாக்கனக் கவிகை வள்ளன் முகம்மதுக் குரைத்தார் மன்னோ.

4

      (இ-ள்) அவ்வாறு வர, தேனைக் கொண்ட பழங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அந்தத் திரு மக்கமாநகரத்தில் வாழ்கின்றவர்கள் ஒழியாத பிரகாசத்தைப் பொருந்திய கோட்டை மதில்களையுடைய ஷாமிராச்சியத்தினது பிரயாணத்தை யொழித்துப் பிறகு இறாக்கு தேசத்தில் வியாபாரத் தொழில்களைச் செய்கின்றாரென்று கூறும் அந்தச் சமாச்சாரங்க ளெல்லாவற்றையும் நீங்காத மேகக்குடையை யுடைய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குச் சொன்னார்கள்.

 

3681. சிலையயிற் படைக டாங்குஞ் செல்வரும் பரியுங் கூட்டிப்

     புலியெனும் காரி தாதன் புதல்வரைத் தலைமை செய்து

     நலிவற மக்க நாட்டார் வரும்வழி நாப்பண் வைகி

     வலியுட னிருந்து வெட்டிப் பறித்திவண் வருக வென்றார்.

5  

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் சொல்ல, அந்நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வில், வேல் முதலிய ஆயுதங்களைத் தாங்கிய செல்வர்களான வீரர்களையுங் குதிரைகளையு மொன்று சேர்த்துப் புலியென்று சொல்லும் ஹாரிதாவென்பவனது புத்திரரான செய்து றலியல்லாகு அன்கு அவர்களை அவர்களுக்குத் தலைமைத்தனத்தை யுடையவர்களாகச் செய்து திருமக்கமா நகரத்தையுடைய காபிர்கள் மெலிவின்றி வருகின்ற மார்க்கத்தின் மத்தியில் வலிமையோடும் தங்கியிருந்து அவர்களை வெட்டி அவர்களது பொருட்க ளியாவையுங் கவர்ந்து கொண்டு இங்கு வாருமென்று சொன்னார்கள்.