இரண்டாம் பாகம்
(இ-ள்) இந்தப்
பூலோகத்தினிடத்திலுள்ள யாவர்களுந் துதிக்கா நிற்குங் கதீஜா றலி யல்லாகு அன்ஹா அவர்களது
புத்திரிகளில் பெண்களுக் கரசாகிய உம்முல்குல் தூமென்று சொல்லுந் திருநாமத்தை யுடைய இரத்தின
தீபமானவர்களைக் குற்றமற்ற உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு அவர்களது இதயமானது மகிழ்ச்சியுறும்படி
அவர்களுக்கு விவாகமுடித்துக் கொடுத்தார்கள். அவர்களும் அன்புடன் சந்தோஷித்து இனிமையோடு
மிருந்தார்கள்.
3735.
மறமும் வீரமு மிலகிய
வேலுது மானுக்
குறையு மாவியின்
மிக்குயுர் புதல்வியை யுதவிக்
கறைகொள் வெங்குபிர்க்
குலங்கடிந் தருங்கலி மாவை
நறைத ரும்புவி யிடத்தினி
னடத்துமந் நாளில்.
7
(இ-ள்) வலிமையும்
வீரமும் பிரகாசிக்கின்ற வேலாயுதத்தையுடைய உதுமானிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு அவர்களுக்கு
நாயகம் நபிகட் பெருமானார் நபி றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் தங்கள் சரீரத்தில்
தங்கிய பிராணனைப் பார்க்கிலும் மிக மேன்மைப்பட்ட புத்திரியான அந்த உம்முல்குல்தூம் றலியல்லாகு
அன்ஹா அவர்களை அவ்வாறு விவாக முடித்துக் கொடுத்துக் குற்றத்தைக் கொண்ட வெவ்விய காபிர்களது
கூட்டத்தை யழித்து அருமையான ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை
வாசனையைத் தருகின்ற இப்பூலோகத்தினிடத்து நடத்துகின்ற அந்தக் காலத்தில்.
3736.
மல்வ ளர்ந்தெழும்
புயன்உசை மாவரத் துதித்த
செல்வி யையெழில்
செயினபைப் பொறைச்செழு மமுதைப்
பல்வி தத்தொடுந்
திருமண முடித்திசை பரப்பி
யில்வ ளத்தொடு
முறைந்தனர் கபீபெனு மிறசூல்.
8
(இ-ள்) ஹபீபென்று சொல்லுங் காரணப் பெயரை
யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
வலிமையானது கிளர்ந்து ஓங்காநிற்கும் தோள்களை யுடையவனான உசைமாவென்பவனது வரத்தினால் இவ்வுலகத்தின்கண்
தோற்றிய செல்வியும் அழகிய ஸயினபு றலி யல்லாகு அன்ஹாவென்னு நாமத்தை யுடையவர்களுமான பொறுமையைக்
கொண்ட செழிய அமுதானவர்களைப் பலவிதத்தோடும் அழகிய கலியாண முடித்துத் தங்களது கீர்த்தியை
எவ்விடத்தும் பரவச் செய்து இல்லறத்தினது செல்வத்துடன் தங்கியிருந்தார்கள்.
|