பக்கம் எண் :

சீறாப்புராணம்

1377


இரண்டாம் பாகம்
 

3758.  அரைவயிற்றுக் காற்றாத மூன்றுறட்டி

          யெண்பதுபேர்க் களித்து மீறிக்

     கரைததும்பிக் கிடந்தசெழும் பாத்திரத்தை

          நோக்கிமனங் களிப்புற் றோங்கி

     விரைவினுடன் மனையிடத்திற் கொண்டருந்து

          மெனவுரைப்ப விரும்பி யேந்தி

     யரசரபூத் தல்காவு மனையிடத்தி

          னுளரெவர்க்கு மளித்திட் டாரால்.

10

     (இ-ள்) பாதிவயிற்றுக்குத் திருப்தியாகாத  அந்த மூன்று உறட்டியை அவ்வாறு எண்பது அசுஹாபிமார்களுக்குக் கொடுத்தும் அதிகரித்துக் கரைகளில் நிறைந்து கிடந்த செழுமையான அப்பாத்திரத்தை அவர்கள் பார்த்து மனமானது சந்தோஷ மடையப் பெற்றோங்கி வேகத்தோடும் உமது வீட்டின்கண் கொண்டு போய்ச் சாப்பிடுமென்று கட்டளையிட, மன்னவராகிய அந்த அபூத்தல்ஹா றலியல்லாகு அன்கு அவர்களும் பிரியப்பட்டு அதைக் கைகளில் தாங்கிக் கொண்டு போய் வீட்டினிடத் துள்ளவர்களான யாவர்களுக்குங் கொடுத்தார்கள்.

 

3759. வரிசையபூத் தல்காவு மனைவியும்மு

          சுலைமென்னு மயிலன் னாளும்

     பரவியிரு பதம்போற்ற வுயிர்த்துணைவ

          ரெனுமரசர் பலருஞ் சூழுக்

     குரிசினபி யெழுந்தருளி யுவந்ததிரு

          மனைகுறுகிக் குறைக டீர

     விருநிலத்திற் புகழோங்க தீன்பெருகப்

      புவிபுரந்தங் கிருந்தா ரன்றே.

11

     (இ-ள்) அவ்வாறு கொடுக்கப் பெருமையிற் சிறந்தோர்களான நமது நாயகம் நபிசெய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா  முகம்மது முஸ்தபா ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல்சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் சங்கையையுடைய அபூத்தல்ஹா றலியல்லாகு அன்கு அவர்களும், அவர்களது நாயகியார் உம்முசுலைம் றலியல்லாகு அன்ஹா என்று சொல்லும் மயில் போலுஞ் சாயலையுடையவர்களும் பணிந்து இரு பாதங்களையுந் துதிக்கவும், தங்களது பிராணனை நிகர்த்த தோழர்களென்று கூறும் மன்னர்களான பல அசுஹாபிமார்களும், சூழவும், எழுந்தருளி விரும்பிய தங்களது தெய்வீகந் தங்கிய வீட்டில் வந்து சேர்ந்து குற்றங்களகலவும், பெரிய இந்தப் பூமியிற் கீர்த்தியானது வளரவும், தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கமானது அதிகரிக்கவும், அந்தத் திருமதீனமா நகரத்தில் இப் பூலோகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்.